shadow

ஏல வீட்டையும் வாங்கலாமே!

houseஇந்தியாவில் வீட்டுக் கடனை வாங்குபவர்கள் பெரும்பாலும் 7 முதல் 10 ஆண்டுகளில் கடனை அடைத்துவிடுவதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அதேசமயம் வங்கிகளில் வீட்டுக் கடன் வாங்கி அதைத் திருப்பச் செலுத்த முடியாதவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துவருவதாகக் கூறுகின்றன புள்ளிவிவரங்கள்.

வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தாவிட்டால் என்னவாகும்? திருப்பிச் செலுத்த முடியாதவர்களின் வீடுகளை வங்கிகள் திருப்பி எடுத்துக்கொள்ளும். அந்த வீட்டை ஏலம் விடும். இப்படி வங்கி விடும் ஏல வீட்டை வாங்குவது லாபமா, நஷ்டமா?

பெருந்தொகையைத் திரட்டி வீடு வாங்குவது எல்லோருக்கும் இயலாத காரியம். இன்று வங்கிகள் வழங்கும் வீட்டுக் கடன்கள் மூலமே பலருக்குச் சொந்த வீடு என்ற கனவு நனவாகிறது. பழைய வீடு, புதிய வீடு என்று பார்க்காமல் வீடு வாங்குபவர்கள் இருப்பதுபோல ஏல வீட்டை வாங்கவும் பலர் இருக்கிறார்கள். ஏல வீட்டை வாங்கப் பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள்.

பொதுவாக வீடு வாங்கும்போது பல விஷயங்களை ஆராய்ந்துதான் வாங்குவோம். ஏல வீடு என்றால், வங்கிகளே வீட்டை விற்பதால் பலரும் அதை சவுகரியமாக உணருகிறார்கள். எந்த விஷயத்திலும் நன்மைகள் இருப்பது போல தீமைகளும் இருக்கவே செய்யும். ஏல வீட்டை வாங்குவதிலும் அப்படித்தான்.

நன்மைகள் என்ன?

# வீடு ஏலத்துக்கு வரும்போது வங்கியில் உள்ள சட்ட வல்லுநர்கள் வீட்டைப் பற்றி துருவித் துருவி விசாரிப்பார்கள். பத்திரங்களை முழுமையாக ஆய்வு செய்வார்கள்.

# பத்திரங்களில் எந்த விதக் குறைபாடோ, வில்லங்கமோ இல்லை என்பது தெரியவந்த பிறகே வீடு ஏலத்துக்குக் கொண்டுவரப்படும்.

# வங்கி விடும் ஏலம் மூலம் வீட்டை வாங்கினால் சட்ட ரீதியாக எந்தப் பிரச்சினையும் எழ வாய்ப்பு கிடையாது.

# வீட்டின் பழைய சொந்தக்காரரால் எந்தப் பிரச்சினையும் வராது.

# வீட்டைப் பொது ஏலத்துக்கு வங்கியிடமிருந்து எடுப்பதால் விலை நியாயமாக இருக்கும். பில்டர்களிடமிருந்தோ அல்லது பிறரிடமிருந்தோ வாங்கும்போது விற்கப்படும் அளவுக்கு இருக்காது. ஏல வீட்டை விற்பதில் பெரும்பாலும் வங்கிகள் வியாபார நோக்கம் மற்றும் லாப நோக்கத்தைப் பார்ப்பதில்லை. அவர்களுடைய பணம் கிடைத்தால் போதும் என்றே நினைப்பார்கள்.

# வீட்டை ஏலத்துக்கு விடுவது ஏல விற்பனை விதிமுறைகளுக்கு உட்பட்டே இருக்கும். இதேபோல ஏல விற்பனைக்கான ‘சர்ஃபாசி’ சட்டத்துக்கு உட்பட்டதாகவும் இருக்கும்.

தீமைகள் என்ன?

# ஏலத்தில் வாங்கிய வீட்டில் அதன் உரிமையாளர் குடியிருந்தால், ஏலத்துக்குப் பிறகு அவர் உடனே வீட்டைக் காலி செய்துகொடுத்துவிடுவார். ஒரு சிலர் சொந்த வீட்டை மாத வாடகைக்கோ, லீசுக்கோ விட்டிருப்பார்கள். அதில் குடியிருப்பவர்கள் அந்த ஒப்பந்தத்தைக் காட்டி வீட்டை உடனே காலி செய்ய மறுக்கவும் செய்யலாம்.

ஒருவேளை தீர்க்கமாக மறுத்துவிட்டால், ஒப்பந்தம் காலாவதி ஆகும் வரை அவர்கள் குடியிருக்க முடியும். வீட்டை ஏலம் எடுத்தவர் அதுவரை காத்திருக்கும் நிலை ஏற்படலாம். ஏல வீட்டை வாங்குவதில் உள்ள ஒரே எதிர்மறையான விஷயம் இதுதான்.

ஏல நடைமுறை என்ன?

# வங்கிகள் விடும் ஏல வீட்டை வாங்க யார் வேண்டுமானால் கலந்துகொள்ளலாம். குறிப்பிட்ட வங்கியின் வாடிக்கையாளர்தான் கலந்துகொள்ள வேண்டும் என்றில்லை.

# ஏலம் விடப்பட்டு வீட்டை ஒருவர் ஏலம் எடுத்தவுடன் உடனே முன் பணத்தைக் கட்டச் சொல்வார்கள். எனவே ஏலத்துக்குப் போகும்போது முன் பணத்தைத் தயார் செய்துகொள்வதும் முக்கியம்.

# முன் பணம் கட்டிய பிறகு குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் எஞ்சிய பணத்தைக் கட்டிவிட வேண்டும். அதற்கு வங்கிகள் கால அவகாசம் கொடுக்கும். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பணம் கட்டாமல் போனாலோ, பணம் இல்லை என்று கைவிரித்துவிட்டாலோ தானாகவே ஏலத்தில் எடுத்த வீடு ரத்தாகிவிடும். பிறகு மீண்டும் வங்கிகள் வீட்டை ஏலத்துக்கு விடும்.

# ஏலத்தில் வீட்டுத் தரகர்களும் பங்கேற்கவே செய்வார்கள். நிறைய தரகர்கள் பங்கேற்கும்போது அவர்கள் ஒன்றுகூடி ஏற்கனவே பேசி வைத்து ஏலத் தொகையைக் கூட்டவோ, குறைக்கவோ செய்து விடுவார்கள்.

# தரகர்கள் ஏலத்தைத் தாறுமாறாக ஏற்றிவிட்டுக் கடைசியில் யார் தலையிலாவது கட்டிவிட்டுச் சென்றுவிடுவார்கள். ஏலத்தின் போது அப்படியான நிலை தென்பட்டால் ஏலத்தில் வீடு வாங்க வந்தவர்கள் கொஞ்சம் உஷாரக இருக்க வேண்டும்.

Leave a Reply