shadow

எடை குறைந்த செங்கற்கள் கொண்டு வீடு கட்டலாமா?

வீடு கட்டும்போது நம்மில் பலரும் வீட்டுக்கு என்ன வண்ணம் அடிக்க வேண்டும், உள்ளே எப்படி அழகு படுத்தலாம் என்பதையெல்லாம் யோசிக்கிறோமே தவிர, வேறு சில முக்கியமானவற்றைப் பற்றி யோசிப்பதில்லை. முக்கியமாக, செங்கல்.

இதைப் படிக்கும்போதுகூடப் பலரும் செங்கல்லில் நாம் என்ன முடிவெடுக்க முடியும் என்று வியப்படையலாம். முடிவெடுக்க முடியும். நம் கட்டிடம் நிலைத்து நிற்பதற்கு அதைக் கட்டப் பயன்படுத்தும் செங்கல்லின் தரமும் உறுதியும் மிகவும் முக்கியம். செங்கல்லில் என்ன வித்தியாசம்? சூளையில் வேகவைத்த கணிமண். அவ்வளவுதானே என்கிறீர்களா?

முன்பெல்லாம் கடின உழைப்புக்கு ஒரு தனி கவுரவம் இருந்தது. இப்போதெல்லாம் கடின உழைப்பைவிடப் புத்திசாலித்தனமான உழைப்புக்குத்தான் காலம். கட்டிடக் கலையிலும் இதேபோன்ற நிலை வந்துவிட்டது. செங்கல் என்றால் அது மிகவும் உறுதியானதாக இருக்க வேண்டும் என்பது நம் எண்ணம். உறுதிக்கு அடையாளமாகச் செங்கல் அதிக எடை கொண்டதாக இருக்க வேண்டும் என்பதுதான் நமது எதிர்பார்ப்பு.

ஆனால், சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகமாகி சமீபத்தில் பரவிவரும் புதிய வகைச் செங்கற்களை முதல்முறை பார்ப்பவர்களுக்குத் திகைப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. அதாவது இந்தச் செங்கலுக்குள் வெற்றிடத்தைக் காணலாம்! உட்புறம் வெற்றிடம் அமைந்த செங்கற்களா? இவற்றைப் பயன்படுத்தினால் கட்டிடம் அப்படியே உட்கார்ந்து விடுமே என்று உங்களில் சிலர் பதறக் கூடும்.

அதற்கெல்லாம் வாய்ப்பு இல்லையாம். இந்த வகைச் செங்கற்களைப் பயன்படுத்துவதால் பலவித நன்மைகள் உண்டு என்கிறார்கள். இவை வெப்பத்தை எளிதில் இழப்பதில்லை. இதன் காரணமாகக் கோடைக் காலத்தில் ஏ.சி. பயன்பாட்டைக் குறைக்க முடியும். அதேபோல் குளிர்காலத்தில் மின்சாரப் பயன்பாடு குறையும். இந்த வகைச் செங்கல்கள் ஏற்கெனவே 1000 டிகிரி செல்சியஸ் வரை வெப்பப்படுத்தப்படுவதால் இவை தீப்பற்றிக் கொள்வதில்லை. அப்படியே தீயில் சிக்கினாலும் தீயில் வாட்டப்பட்டதுபோல இருக்குமே தவிர நச்சான வாயுக்கள் இவற்றின் மூலம் வெளிப்படுவதில்லை.

எப்படி இந்த வகைக் கற்கள் வெப்பத்தைக் கடத்துவதில்லை என்று கேட்டால் எளிதில் விளங்கிக் கொள்ள தர்பூசணியைக் கூறலாம். கோடைக் காலத்தில் நீங்கள் வாங்கும் தர்பூசணியை மேலே தொட்டுப் பார்த்தால் வெப்பமாக இருக்கும். ஆனால், உள்ளே இருக்கும் சதைப் பற்று மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். இதற்குக் காரணம் அதன் மேல்பகுதி ஒரு இடைவெளிபோலச் செயல்பட்டு வெப்பம் உள்ளே செல்லாமல் தடுக்கிறது.

இதேபோலத்தான் மேற்படி செங்கற்களும் செயல்படுகின்றன. இவற்றிலுள்ள துளைகள் ஒரு தனிப்பட்ட செயல்பாட்டை உருவாக்குவதன் மூலம் கோடையில் வீட்டுக்குள் ஓரளவு குளிர்ச்சியையும் குளிர் காலத்தில் ஓரளவு வெதுவெதுப்பையும் கொடுக்கிறது. இவை சுற்றுச்சுழலுக்கு உகந்தவையாகவும் விளங்குகின்றன.

ஒப்பிடும்போது சாதாரணச் செங்கற்களைவிட இது விலை குறைவானது. இயற்கையான பொருள்களைக் கொண்டே (களி மண், கரிப்பொடி, உமி, கிராணைட் குழம்பு) உருவாக்குவதால் ரசாயனம் கலந்தால்கூட ஒவ்வாமை ஏற்படுவதில்லை. புதிய மின் இணைப்புகள் மற்றும் நீர் இணைப்புகளை உருவாக்கும்போது இந்தக் கற்கள் உடையாது. செதுக்குவது சுலபமாக இருக்கிறது.

போரோ என்பது porous என்ற வார்த்தையிலிருந்து வந்தது. போரஸ் என்றால் துவாரங்கள் கொண்ட என்று பொருள். Therm என்பது வெப்பம் நிறைந்த என்று அர்த்தம் கொண்டது. இந்த வகை செங்கற்களை porotherm என்ற பெயரில் தயாரிக்கப்படுகிறது. என்றாலும், இன்னும் வேறு சில அமைப்புகளும் இதுபோன்ற உள்ளுக்குள் ஆங்காங்கே வெற்றிடம் கொண்ட செங்கற்களை உருவாக்கத் தொடங்கி விட்டன. இந்த வகைச் செங்கற்களில் கட்டப்படும்போது தீவிபத்து ஏற்பட்டாலும் அதிலுள்ள வாசம் வெளியேறும்வரை இந்தச் செங்கல் தாக்குப் பிடிக்கும்.

முக்கியமான இன்னொரு நன்மை என்னவென்றால் நமது வழக்கமான செங்கல்லின் எடையில் 60 சதவிகிதம் எடை கொண்டதாக மட்டுமே இது இருக்கிறது. இதனால், இதைக் கையாள்வது எளிதாக இருப்பதுடன் கட்டுமானப் பணியையும் வேகப்படுத்த முடியும். பூஞ்சைக் காளான்கள் தாக்குதல் இந்தச் செங்கற்களைப் பயன்படுத்தும்போது இருப்பதில்லை. தவிர முன்கூட்டியே கட்டிடத்துக்குத் தேவைப்படும் பகுதிகளைத் தயார் செய்து வைத்துக் கொள்ள முடிகிறது.

ஆனால், இந்த வகை போரோதெர்ம் செங்கற்களை அஸ்திவாரத்துக்குப் பயன்படுத்த முடியாது. அதேபோல் மிக அதிகமான தண்ணீர் தேங்கி இருக்கும் இடங்களிலும் பயன்படுத்த முடியாது. காரணம் தண்ணீரின் எதிர்மறை அழுத்தத்தை இவற்றால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. இவை எடை குறைவாக இருப்பதால் இதைக் கையாள்வது எளிது.

Leave a Reply