shadow

ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி நியமிக்கப்பட்டது செல்லாது என உறுதியாகி உள்ளது.

ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்க மறுத்த உத்தரவை எதிர்த்து பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கை மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பி, 2 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவிட்டது.

அதன்படி வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு பட்டியலிடப்பட்ட போது, பன்னீர்செல்வம் தரப்பில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைமை நீதிபதிக்கு மனு அளிக்கப்பட்டது. இறுதியில் அந்த மனு திரும்பப் பெறப்பட்டதை தொடர்ந்து வழக்கில் புதிய நீதிபதியை நியமிக்க தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தார் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி.

அதை தொடர்ந்து புதிய நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், கடந்த 10 மற்றும் 11ம் தேதிகள் விசாரணை நடத்தி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தார். இந்நிலையில்,  இந்த வழக்குகளில் இன்று உத்தரவு பிறப்பித்த நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன், ஜூன் 23ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.