உலகம் முழுதும் சில மணி நேரம் முடங்கி மீண்ட வாட்ஸ் அப்
பிரபல குறுஞ்செய்தி சேவையான வாட்ஸ் அப் புதன்கிழமை இரவில் சில மணி நேரம் முடங்கிய நிலையில், விரைவாக மீட்கப்பட்டது.
இந்தியா, கனடா, அமெரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளில் இந்த முடக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆப்பிள், ஆன்ட்ராய்ட் மற்று விண்டோஸ் இயங்குதளங்களில் குறிப்பிட்ட நேரத்துக்கு வாட்ஸ் அப் முற்றிலுமாக முடங்கியுள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனத்தின் அங்கமான வாட்ஸ் அப் இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”புதன்கிழமை உலகம் முழுவதும் உள்ள வாட்ஸ் அப் பயனர்கள், அதைப் பயன்படுத்த இயலாத நிலை ஏற்பட்டது. இப்பொழுது அந்தப் பிரச்சினை சரிசெய்யப்பட்டு விட்டது. சிரமத்துக்கு வருந்துகிறோம்” என்று தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் சுமார் 100.2 கோடி மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்துகின்றனர். ஏராளமான நாடுகளில் இந்த சேவை தகவல் தொடர்பு மற்றும் வணிகத்தில் முக்கியப் பங்காற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.