shadow

உயிர் காக்கும் மருந்துகள் நம் எதிரிகள் ஆகலாமா?

ந்தியாவில் விற்கப்படும் ஆன்டிபயாடிக் மருந்துகளில் முக்கால்வாசி முறையான அனுமதி பெறாமல் தயாரிக்கப்பட்டவை எனும் அதிர்ச்சித் தகவலைத் தந்துள்ளனர், லண்டனில் உள்ள குயின் மேரி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள். இந்தியாவில் 2007 முதல் 2012 வரை விற்கப்பட்ட ஆன்டிபயாடிக் மருந்துகளில், எஃப்.டி.சி. (FDC – Fixed Drug Combination) எனப்படும், நிலையான மருந்துப் பொருளட்களின் கூட்டுக் கலவையை ஆராய்ந்து இந்தத் தகவலை வெளியிட்டிருக்கிறார்கள்.

மொத்தம் 118 வகையான மருந்துகளை ஆராய்ச்சி செய்ததில், 64% மருந்துகள் அரசிடம் முறையான அனுமதி பெறாமல், தயாரிக்கப்பட்டவை என்பது தெரியவந்துள்ளது. பொதுவாக, நாட்டில் விற்கப்படும் எல்லா மருந்துப் பொருட்களும், சி.டி.எஸ்.சி.ஓ. (CDSCO – Central Drugs Standard Control Organization) எனும் மத்திய அரசு மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பிடம் அனுமதி பெற வேண்டும். அவ்வாறு அனுமதி பெறாமல் மருந்துகளைத் தயாரித்தாலோ, விற்றாலோ, சட்ட விரோதமாகக் கருதப்பட்டு, கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆனால், அது நடந்ததாகத் தெரியவில்லை.

‘இந்தியாவில் இயங்கும் பன்னாட்டு மருந்து நிறுவனங்கள், தொடர்ந்து கட்டுப்பாடில்லாமல், மத்திய அரசின் அனுமதி பெறாத ஆன்டிபயாடிக் மருந்துகளைத் தயாரித்துவருகின்றன. இதனால், இந்தியாவில் நுண்கிருமிகளின் எதிர்ப்பு சக்தி ஆபத்தான நிலையை எட்டியுள்ளது’ என்று லண்டன் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சூழலில், ‘இந்தியாவில் தற்போது விற்கப்படும் ஆன்டி பயாடிக் மருந்துகளில் பெரும்பாலானவை நுண்கிருமிகளை எதிர்த்துப் போராடும் வல்லமையை இழந்துவிட்டன. காரணம், அக்கிருமிகளே மருந்துகளுக்கு எதிராகப் போராடி, எதிர்ப்புசக்தியைப் பெற்றுவிட்டன. இதனால், நாட்டில் நோய்கள் கட்டுப்படுவது தாமதமாகிறது’ என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இதை நாம் சாதாரணமாகக் கடந்துபோக முடியாது.

பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம்

உலக அளவில் ஆன்டிபயாடிக் மருந்துகளைப் பயன் படுத்தும் வழக்கம் நம் நாட்டில்தான் அதிகம். ஆனால், 1987-க்குப் பிறகு, இங்கு ஆன்டிபயாடிக் மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இங்கு விற்கப்படும் முக்கியமான ஆன்டிபயாடிக் மருந்துகள் எல்லாமே வெளிநாட்டில் கண்டுபிடிக்கப்பட்டவை; மருந்தின் மூலப்பொருட்களும் அங்கிருந்துதான் இறக்குமதி ஆகின்றன.

அறுவை சிகிச்சை, அவசர சிகிச்சை, புற்றுநோய் சிகிச்சை, உறுப்பு மாற்று சிகிச்சை போன்ற உயிர் காக்கும் சிகிச்சைகளுக்குத் தேவைப்படும் ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு அயல்நாடுகளை நம்பியே இருக்கிறோம். எனவே, பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் இங்கு வர்த்தகம் செய்ய போட்டிபோடுகின்றன.

அயல் நாடுகளில் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் வாங்க இயலாது. ஆனால், நம் நாட்டில் வீரியமுள்ள எல்லா மருந்து களையும் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் மருந்துக் கடைகளில் தாராளமாக வாங்க முடிகிறது. மக்கள் சுயமருத்துவம் செய்துகொள்ள இது வழி அமைக்கிறது. அதனால், மருந்து விற்பனையும் பல கோடிகளின் உச்சத்தில் நிற்கிறது.

மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள், தங்கள் விற்பனையை அதிகப்படுத்துவதற்காகப் போட்டி போட்டுக்கொண்டு, அறநெறிகளுக்கு அப்பாற்பட்ட சில வணிகவழிகளைப் பயன்படுத்தி, ஆன்டிபயாடிக் மருந்துகளை மருந்துக் கடைகள் மூலம் நேரடியாக விற்பனை செய்ய முன்வருகின்றன. இதன் விளைவால், நாட்டில் 53% பேர் மருத்துவரின் பரிந்துரை இல்லாமலேயே ஆன்டிபயாடிக்குகளைப் பயன்படுத்துபவர்களாக இருக்கின்றனர். 2010-ல் எடுத்த புள்ளிவிவரப்படி 2000-க்கும் 2010-க்கும் இடைப்பட்ட 10 ஆண்டுகளில் நாட்டில் இந்த விற்பனை 76% அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

லண்டன் ஆராய்ச்சியாளர்களின் அறிக்கைப்படி, நாட்டில் விற்கப்பட்ட 118 முக்கிய ஆன்டிபயாடிக் மருந்துகளில் 43 மட்டுமே அரசின் அனுமதி பெற்றவை; மற்றவை அனுமதி பெறாமல், முறையில்லாமல் தயாரிக்கப்பட்டவை. இவற்றில் ஏழு வகை மருந்துகள் நாட்டிலேயே மிகவும் உயர்ந்த விற்பனையை எட்டியுள்ளன.

கிருமிகளுக்கு எதிர்ப்பாற்றல் ஏன்?

இந்த முறையற்ற மருந்துகளின் விற்பனை நீடித்தால், ‘எந்த ஒரு மருந்துக்கும் கட்டுப்படாத பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அப்போது சாதாரணக் காய்ச்சல்கூட உயிரிழப்பில் முடியக்கூடும்’ என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. மேலும், ஒரு நோய்க்கு குறிப்பிட்ட காலத்துக்குச் சாப்பிடக் கொடுத்த ஆன்டிபயாடிக் மருந்தைப் பாதியில் நிறுத்தினால், உடலில் அந்த நோயை உண்டாக்கிய எல்லா பாக்டீரியாக்களும் இறக்காமல் போகலாம். அப்போது அந்த மருந்தின் பிடியிலிருந்து தப்பிக்க, மீதமுள்ள பாக்டீரியாக் கள் தடுப்பாற்றல் கொண்ட கிருமிகளாக உருமாறிக்கொள்ளும். இக்கிருமிகள் தங்கள் மரபணுக்களிலேயே மாற்றம் செய்துகொள்வதன் மூலம், இந்த உருமாற்றத்தை அடைகின்றன. அதே ஆன்டிபயாடிக் மருந்தை அதே நபருக்கு மீண்டும் பயன்படுத்தினால், இந்த பாக்டீரியாக்கள் அதற்குக் கட்டுப்படாது. இவற்றை அழிக்க இன்னும் வீரியம் மிகுந்த ஆன்டிபயாடிக் மருந்துகள்தான் தேவைப்படும். ஆனால், அவற்றின் பக்கவிளைவுகள் அதிகமாக இருக்கும்.

அடுத்து, நோய்க்கு ஏற்ப, மருந்துகளைச் சாப்பிடாமல், தோராயமாக ஆன்டிபயாடிக் மருந்தைச் சாப்பிடுவது, வைரஸ் நோய்களுக்கு ஆன்டிபயாடிக் மருந்தை எடுத்துக்கொள்வது, சாதாரண நோய்த்தொற்றுக்கும் வீரியம் மிகுந்த ஆன்டிபயாடிக்குகளைச் சாப்பிடுவது போன்ற தவறான பழக்கங்களால் மருந்துகளையே எதிர்க்கின்ற ஆற்றல் கிருமிகளுக்கு வந்துவிடுகிறது.

மற்ற நாடுகளைவிட இந்தியாவில்தான் போலி மருத்துவர்கள் அதிகம். பாமர நோயாளிகள் தங்களிடம் தொடந்து சிகிச்சை எடுக்க வேண்டும் எனும் எண்ணத்திலும், உடனடியாக நோய் குணமாக வேண்டும் எனும் நோக்கத்திலும் தேவையில்லாமல் வீரியம் மிகுந்த ஆன்டிபயாடிக்குகளை நோயாளிகளுக்குப் பயன்படுத்துகின்றனர். இதனாலும் கிருமிகளுக்கு எதிர்ப்பாற்றல் வந்துவிடுகிறது.

நாட்டில் இறைச்சிக்காக வளர்க்கப்படும் கோழிகளில், அனுமதியை மீறி, அதிகளவில் ஆன்டிபயாடிக் மருந்துகளைப் பயன்படுத்துவதாலும், விவசாயத்தில் பயிர் வளர்ப்புக்கும் பூச்சிகளை ஒழிப்பதற்கும் அளவுக்கு அதிகமாக ஆன்டிபயாடிக் மருந்துகளைப் பயன்படுத்தும்போதும் இதே மாதிரியான ஆரோக்கியக் கேடுகள் ஏற்படுகின்றன என்று மத்திய சுகாதாரத் துறை கடந்த டிசம்பரில் அறிவிப்பு வெளியிட்டது. ‘தற்போது நுரையீரல் தொற்று, காலரா, வயிற்றுப்போக்கு, சிறுநீர்ப்பாதைத் தொற்று போன்ற சாதாரண நோய்களுக்கு வழங்கப்படும் ஆன்டிபயாடிக்குகள்கூடத் தங்கள் செயல்திறனை இழந்துநிற்கின்றன. அற்புதங்கள் புரியும் ஆன்டிபயாடிக்குகளின் ஆற்றலை மொத்தமாகவே அழிக்கும் அளவுக்கு பாக்டீரியாக்களின் எதிர்ப்பாற்றல் நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது’ என ஆய்வாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.

நோய்கள் கட்டுப்படாது!

பாக்டீரியாக்கள் இவ்வாறு எதிர்ப்பாற்றலைப் பெற்றுவிட்ட காரணத்தால், சிகிச்சை பலன் தராமல் போவது இயல்பு. கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக நம்மை மிரளவைத்துக்கொண்டிருக்கும் காசநோய் இதற்குச் சரியான உதாரணம். முன்பெல்லாம் ஆறு மாத சிகிச்சையில் குணமான காசநோய், தற்போது மருந்துகளுக்குக் கட்டுப்படாத காசநோயாக (Multi Drug Resistance TB – MDR TB) உருமாறிவருகிறது. இதற்கு இரண்டு வருடங்களுக்குச் சிகிச்சை பெற வேண்டும். நாட்டில் 70 லட்சத்துக்கு மேற்பட்ட காசநோயாளிகள் இந்த நிலையில்தான் உள்ளனர். இவர்கள் இதே தன்மையுள்ள காசநோயைத்தான் அடுத்தவர்களுக் கும் பரப்புகின்றனர். இது பேராபத்தானது.

மருந்துகளையே எதிர்த்து நிற்கும் கிருமிகளாலும், ஆற்றல் இழந்து நிற்கும் ஆன்டிபயாடிக்குகளாலும், நோய்கள் குணமாவதில் தாமதம் ஏற்படுவதோடு, சிகிச்சைக்கான செலவும் அதிகமாகும். உயிர் காக்கும் என்று நம்பி எடுக்கப்படும் மருந்துகள் சில நேரங்களில் பலன் தராமலும் போகும். இது நாட்டின் பொது ஆரோக்கியத்தையும் சாமானியரின் பொருளாதாரத்தையும் பாதிக்கும்.

தேவைக்கேற்ப உள்நாட்டிலேயே மூல மருந்துகளைத் தயாரிப்பதற்கு எவ்வித முனைப்பும் இல்லை; ஆன்டிபயாடிக் மருந்துகளை மக்கள் அதிகளவில் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான சட்ட விதிமுறைகள் இல்லை; மருந்து தயாரிப்பு முறைகளிலும், மருந்து விற்பனை விதிகளிலும் தெளிவு இல்லை. இவைதான் இந்தத் தவறான போக்குக்கு அடிப்படைக் காரணங்கள்.

ஆன்டிபயாடிக்குகளைப் பயன்படுத்துவதில் உள்ள விதிமுறைகளை ஒழுங்குபடுத்த மத்திய சுகாதாரத் துறை 2011-ல் ஒரு சட்டம் கொண்டுவந்தது. ஆனால், அதை அரசு சரியாக நடைமுறைப்படுத்தத் தவறிவிட்டது. ஆன்டிபயாடிக்குகளின் அதீத பயன்பாடு மக்களின் ஆரோக்கியத்துக்கு ஆபத்தாக அமையும் என்பதை அப்போதே உணர்ந்து செயல்பட்டிருந்தால், நிலைமை இவ்வளவு மோசமாகி இருக்காது.

அரசுகள் என்ன செய்ய வேண்டும்?

இனிமேலாவது மத்திய – மாநில அரசுகள் விழித்துக்கொண்டு, பன்னாட்டு மருந்து நிறுவனங்களின் மருந்து தயாரிப்பிலும், தரக்கட்டுப்பாட்டிலும் விற்பனையிலும் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளைச் சரியாக நிர்ணயிக்க வேண்டும். போலி மருந்துகளின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவும் போலி மருத்துவர்களைக் கட்டுப்படுத்தவும் சுகாதாரத் துறையும் மருந்துத் தரக்கட்டுப்பாட்டுத் துறையும் இணைந்து செயலாற்ற வேண்டும். அனுமதி பெறாமல் தயாரிக்கும் மருந்து நிறுவனங்களின் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு வழிசெய்யும் வகையில் சட்டதிட்டங்களை மாற்ற வேண்டும்.

மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தற்போதுள்ள ஆன்டி பயாடிக்குகளைவிட பக்கவிளைவுகள் குறைந்த மருந்துகளைக் கண்டுபிடிக்க வேண்டும். புதிய தடுப்பூசிகளைக் கண்டுபிடிப்பது, விரைவாக நோய்களைக் கணிக்கும் பரிசோதனைமுறைகளைக் கண்டுபிடிப்பது போன்ற ஆராய்ச்சிகளை மேம்படுத்த வேண்டும். இதற்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கி உதவ வேண்டும்.

மக்கள் என்ன செய்ய வேண்டும்?

நோய் வந்துவிட்டால் சுயமருத்துவம் கூடாது. ஆரம்ப நிலையிலேயே மருத்துவரிடம் சிகிச்சை பெறுவதுதான் நல்லது. பொதுச் சுகாதாரம் குறைவது நோய்த்தொற்றுக்கு முக்கியக் காரணம். எனவே, சுயசுத்தம் காப்பதும் தூய்மை யான சுற்றுப்புறம் பேணுவதும் நம் முன்நிற்கிற மிகப் பெரிய கடமைகள். சுத்தமான குடிநீரும் சுகாதாரமான உணவும் அரசால் உறுதிசெய்யப்பட வேண்டும்.

தடுப்பூசிகளை எல்லோரும் போட்டுக்கொள்ள வேண்டும். ஆன்டிபயாடிக்குகளைத் தேவையான கால அளவுக் குப் பயன்படுத்த வேண்டும். அடுத்தவர்களுக்குப் பரிந் துரைக்கப்பட்ட மருந்துகளையும், வீட்டில் மிச்சமிருக்கும் மருந்துகளையும் பயன்படுத்தக் கூடாது.

இவற்றின் மூலம் தொற்றுநோய்கள் பரவுவதைத் தடுத்துவிடலாம்; ஆன்டிபயாடிக்குகளின் தேவையைக் குறைத்து விடலாம். கிருமிகளுக்கு எதிர்ப்பாற்றல் ஏற்படுவதைத் தடுத்துவிடலாம். ஆன்டிபயாடிக் அச்சுறுத்தலில் இருந்து விடுபடலாம்

thanks to tamil.thehindu.com

Leave a Reply