shadow

இன்னும் 2 மாதங்களில் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படும்: சி.இ.ஓ தகவல்

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என தேசிய பசுமைத்தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளதை அடுத்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை 2 மாதங்களில் திறக்கப்படும் என அந்த ஆலையின் சி.இ.ஒ ராம்நாத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

ஸ்டெர்லைட் ஆலை குறித்து மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது, அனைத்துத் தரப்பு கருத்துக்களையும் கேட்ட பிறகே பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விதித்த புதிய விதிமுறைகளை நிறைவேற்ற எங்களுக்கும் இன்னும் நேரம் இருக்கிறது. புதிய நிபந்தனைகளை கடைபிடிப்போம்.

தூத்துக்குடி மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறோம். இரண்டு மாதங்களில் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படும். மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் அதற்கான அனுமதி கேட்டிருக்கிறோம்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை சார்பில் 100 கோடி ரூபாய் மதிப்பில் சமூக நலத்திட்டங்கள் வழங்க முடிவு செய்துள்ளோம். 15 கிராமங்களுக்கு குடிநீர் வழங்கப்படும். 10 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும். மேலும், ஒரு பள்ளி, ஒரு மருத்துவமனை திறக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது

இவ்வாறு ஸ்டெர்லைட் ஆலையின் சி.இ.ஒ ராம்நாத் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply