shadow

மழைக்காலம் ஆரம்பித்து விட்டால் வீடுகளுக்குள் கொசுகளின் படையெடுப்பு தொடர்ந்து கொண்டே இருக்கும். கொசுக்களை விரட்டுவதற்கு பெரும்பாலானோர் கொசுவர்த்தி சுருள், கொசுவிரட்டி ஸ்பிரே, கொசு விரட்டி திரவங்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்துகிறார்கள். இவற்றில் பெரும்பாலானவை ரசாயனங்கள் நிறைந்தவை. அவற்றின் வீரியம் அதிகமாக இருந்தால் சுவாசிப்பதில் சிரமத்தை ஏற்படுத்தும். குடும்பத்தினர் அனைவருக்கும் ஏதாவதொரு வகையில் ஆரோக்கிய குறைபாடுகளை உண்டாக்கும். மலேரியா, டெங்கு போன்ற ஆபத்தான நோய்களை பரப்பும் கொசுக்கள் கடிப்பதை தவிர்க்க எளிய வழிமுறைகளை பின்பற்றினாலே போதுமானது.

ஜன்னலை மூடுங்கள் கொசுக்கள் வீட்டுக்குள் நுழைவதை தடுப்பதற்கு ஜன்னல் கதவுகளில் கொசு வலைகளை பொருத்துவது சிறப்பானது. கொசு வலை அமைக்காவிட்டால் மாலையில் சூரியன் மறைந்ததும் எல்லா ஜன்னல்களையும், கதவுகளையும் இறுக்கமாக மூடிவிடவேண்டும். ஏனெனில் சூரிய ஒளியின் பிரகாசம் கொசுக்களை முடக்கி போட்டுவிடும். அதனால்தான் மாலை நேரத்திற்கு பிறகு கொசுக்கள் சுறுசுறுப்பாக இயங்கும். மற்ற வேளைகளைவிட இரவு நேரத்தில்தான் வீட்டுக்குள் சர்வ சாதாரணமாக ஊடுருவி தொந்தரவு செய்யும். கொசு விரட்டி செடிகளை வளருங்கள் வீட்டிற்குள் கொசுக்கள் நுழைவதை தடுப்பதற்கு செடி வளர்ப்பும் உதவும். சில செடிகளின் வாசம் கொசுக்களுக்கு ஒத்துக்கொள்ளாது. சாமந்தி, துளசி, சிட்ரோனெல்லா, புதினா, லெமன் கிராஸ், ரோஸ்மேரி, லாவண்டர் போன்ற செடி வகைகள் கொசுக்களை விரட்டும் தன்மை கொண்டவை. சில செடி வகைகள் கொசுக்களை மட்டுமின்றி சில பூச்சி இனங்களையும் விரட்டக்கூடியவை.

பூண்டு சாறு உபயோகியுங்கள் ரசாயனம் நிறைந்த கொசு விரட்டி ஸ்பிரேக்களை பயன்படுத்த விரும்பாதவர்கள் பூண்டுவை மாற்றுப் பொருளாக தேர்ந்தெடுக்கலாம். பூண்டுவை தோல் நீக்கி சில பற்களை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும். ஓரளவு சூடு ஆறிய பிறகு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி வீட்டின் அறை முழுவதும் ஸ்பிரே செய்யவும். பூண்டின் வாசம் கடுமையாக இருக்கும். அது கொசுக்களை நெருங்க விடாது. கொசுக்கள் உற்பத்தியை கட்டுப்படுத்துங்கள் வீட்டிற்குள் எங்காவது கொசுக்கள் பெருகுவதற்கான சூழல் இருக்கிறதா என்பதை சரிபார்க்க வேண்டும். ஏ.சி., குளிர்சாதனப் பெட்டியின் பின் பகுதியில் தேங்கும் தண்ணீரை உடனே அப்புறப்படுத்திவிட வேண்டும். அவை கொசுக்கள் உற்பத்தி செய்வதற்கான சூழலை உருவாக்கும்.

மேலும் வீட்டிற்குள் பழைய பொருட்களை அடுக்கி வைக்கும் அறை, மாடி, செடிகள் வளர்க்கும் இடம் போன்ற பகுதிகளில் கொசுக்கள் பெருக்கம் நடைபெறுவதற்கு வாய்ப்புள்ளதால், எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வீட்டின் வெளிப்பகுதியில் உள்ள வடிகால்களையும் மூடி, சுத்தமாக வைத் திருக்க வேண்டும். எலுமிச்சை துண்டு – கிராம்பு பயன்படுத்துங்கள் கொசுக்களை விரட்டுவதற்கு எலுமிச்சை பழத்தையும், கிராம்பையும் உபயோகிக்கலாம். இவை இரண்டின் வாசனையும் கொசுக்களுக்கு பிடிக்காது. எலுமிச்சை பழத்தை இரு துண்டுகளாக வெட்டி அதனுள் கிராம்புகளை சொருகி வைத்தால் போதுமானது. அவற்றின் வாசம் காற்றில் கலந்து கொசுக்களை விரட்டி யடித்துவிடும். இரண்டு எலுமிச்சை பழங்களை வெட்டி அதனுள் கிராம்பு சொருகி வீட்டின் ஒவ்வொரு அறைகளிலும் வைக்கலாம். சோப்பு நீரை உபயோகியுங்கள் சோப்பு கலந்த நீரும் கொசு விரட்டியாக செயல்படும் என்பது உங்களுக்கு தெரியுமா? அகன்ற பாத்திரத்தில் சோப்பு நீரை ஊற்றி வைக்க வேண்டும். அதற்கு பாத்திரம் துலக்க பயன்படுத்தும் சோப் அல்லது துணி துவைக்க உபயோகப்படுத்தும் சோப்பை பயன்படுத்தலாம். தண்ணீரில் சிறிதளவு சோப்பை கரைத்தால் போதுமானது. அந்த சோப்பு தண்ணீர் கொசுக்களை எளிதில் ஈர்த்துவிடும். வேகமாக வந்து சோப்பு தண்ணீரின் மீது அமரும். பின்பு அதனால் பறக்க முடியாமல் நீரிலேயே சிக்கி மடிந்துவிடும்.