shadow

ஆசிரியர் தகுதித் தேர்வு: கட்-ஆஃப் மதிப்பெண் முறையை நீக்க பரிசீலினை: அமைச்சர் செங்கோட்டையன் உறுதி

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு கட்-ஆஃப் மதிப்பெண் முறையை நீக்குவது குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்க இருப்பதாக, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோபியில் இருந்து சென்னை செல்லும் வழியில் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம், திங்கள்கிழமை அவர் மேலும் கூறியதாவது:
மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்காக மத்திய அரசு கொண்டு வந்துள்ள நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக, தமிழக சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிப்பார் என்று நம்புகிறோம்.
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு கட்-ஆஃப் மதிப்பெண் முறை நீடிப்பதால், பாதிப்பு இருப்பதாகத் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. இதை நீக்குவது குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழக அரசின் எதிர்ப்பால் பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் பணியை கேரள அரசு நிறுத்தியுள்ளது. நீதிமன்ற உத்தரவை அடுத்து தமிழகத்தில் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
சட்டப்பேரவையில் எங்களுக்குப் பெரும்பான்மை உள்ளது. இரட்டை இலைச் சின்னமும் எங்களிடம்தான் உள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை அரசு அலுவலகங்களில் வைக்கக் கூடாது என்று கூறுவதற்கு மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட யாருக்கும் உரிமை இல்லை என்றார் அவர்.

Leave a Reply