மேட்டூர் அணைக்கு ஒரு சொட்டு நீர் கூட கிடைக்காது: வைகோ எச்சரிக்கை

காவிரியின் குறுக்கே மேகதாதுவில், கர்நாடக அரசு அணைக்கட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் நிலையில் இந்த முயற்சியை மத்திய அரசு அனுமதிக்க கூடாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:

கர்நாடக அரசின் சார்பில் மத்தியச் சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு அனுப்பி உள்ள கடிதத்தில், “காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு தமிழகத்தின் கருத்தையோ, அனுமதியையோ பெற வேண்டிய தேவை இல்லை” என்று கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகம் தம் விருப்பப்படி புதிய அணைகள் கட்டிக் கொள்ள காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்போ, உச்சநீதிமன்ற உத்தரவுகளோ அனுமதிக்கவில்லை என்றும் வைகோ கூறியுள்ளார்.

காவிரியின் குறுக்கே, மேகதாதுவில் அணை கட்டப்பட்டால், மேட்டூர் அணைக்கு ஒரு சொட்டு நீர் கூட வருவதற்கு வழி இல்லாமல் போகும் என்றும் வைகோ சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்நாட்டின், உயிர் ஆதாரமான காவிரி ஆற்றின் குறுக்கே, மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒருபோதும் அனுமதி வழங்கக் கூடாது

இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply