shadow

புதிய பாடத் திட்டத்தில் நவீன தொழில்நுட்பங்களுக்கு முக்கியத்துவம்

தமிழக அரசின் சார்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட புதிய பாடத் திட்ட நூல்கள்.

தமிழக அரசு வெளியிட்ட 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கான புதிய பாடத் திட்டத்தில் நவீன தொழில்நுட்பங்கள் தொடர்பான தகவல்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

அவற்றில் குறிப்பிடத்தக்க சில அம்சங்கள் தொடர்பான தகவல்கள் மாணவர்களுக்கு விளக்கப்பட்டுள்ளன.
உங்களுக்குத் தெரியுமா?: பாடநூல்களில் வழக்கமாக இடம்பெற்றிருக்கும் தகவல்களுடன் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதி பெட்டிச் செய்தி போன்று கொடுக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்ட பாடத்தில் உள்ள விஷயங்கள் நமது அன்றாட வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு மாணவர்களுக்கு எளிய முறையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

க்யூ.ஆர். குறியீடு: ஒவ்வொரு பாடத்துக்கும் இரண்டு க்யூ.ஆர்.குறியீடுகள் இடம்பெற்றுள்ளன. அதை ஆண்ட்ராய்டு வசதி கொண்ட செல்லிடப்பேசியில் ஸ்கேன் செய்வதன் மூலம் பாடம் குறித்து இணையதளத்தில் ஏற்கெனவே உள்ள கருத்துகள், காணொலிக் காட்சிகள் (யு-டியூப்), படங்கள் குறித்து அறிந்து கொள்ள முடியும்.

தகவல் தொடர்புத் தொழில்நுட்பம் (ஐசிடி): மாறிவரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் ‘டேப்லெட்’, கணினி, கணினி தொடுதிரை போன்ற சாதனங்களைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு பாடங்களை நடத்துவதற்காக ‘இன்ஃபர்மேஷன் அண்ட் கம்யூனிகேஷன் டெக்னாலஜி’ என்ற தொழில்நுட்பம், வகுப்பறைகளில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இணையதள விவரங்கள்: பாடநூல்களில் ஒவ்வொரு பாடங்கள் தொடர்பாகவும் கூடுதல் விவரங்களைப் பெறுவதற்காக இணையதள முகவரிகள் இடம்பெற்றுள்ளன.

சொற்களஞ்சியம்: பாடநூலின் பின்பகுதியில் முக்கிய கலைச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் சொற்களஞ்சியம் பகுதியில் இடம்பெற்றுள்ளன. உதாரணமாக கார்ட்டூன் என்ற வார்த்தைக்கு நேராக கருத்துப்படம் என கொடுக்கப்பட்டுள்ளது.

பாடத்தின் இலக்கு: இந்தப் பகுதியில் அந்தப் பாடம் இடம் பெற்றதற்கான காரணம், பாடத்தில் குறிப்பிட்டுள்ள விஷயம் தொடர்பாக உயர் கல்வியில் என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்ற தகவல் இடம்பெற்றுள்ளன.
1,000 ஆசிரியர்கள்- 500 மொழிபெயர்ப்பாளர்கள்: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வி வளாகத்தில் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி-பயிற்சி மையம் உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் இரவு பகலாக பாடத் திட்ட உருவாக்கப் பணிகள் நடைபெற்றன. இதில் 200 பேராசிரியர்கள், 1,000 ஆசிரியர்கள், 500 மொழி பெயர்ப்பாளர்கள், 75 ஓவிய ஆசிரியர்கள், 5 வடிவமைப்பு நிறுவனங்கள் ஈடுபட்டன.

Leave a Reply