shadow

குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும்போது பெற்றோர்கள் தவறுகளால் ஏற்படும் விளைவுகள் என்ன? மருந்து கொடுப்பது எப்படி என்பதை பார்ப்போம்

குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும்போது கவனக் குறைவாகப் பெற்றோர்கள் தவறு செய்வது எல்லா வீட்டிலும் நடப்பதுதான். தெரியாமல் செய்யும் தவறை விட நாம் செய்வது தவறு என்று தெரியாமலே, நாம் செய்து கொண்டிருக்கும் தவறுகள்தான் அதிகம். அப்படிப்பட்ட தவறுகளை தவிர்க்க வேண்டியது மிக முக்கியம். தாய்மார்கள் செய்யும் சில தவறுகளும், அவற்றின் விளைவுகளும் என்ன என்று பார்ப்போமா ?

மருந்து சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு அதை உணவுடன் கலந்து கொடுப்பது பல பெற்றோர்களின் வழக்கம். சிலவகை மருந்துகள் உணவுடன் கலக்கப்படும்போது செயல் திறனை இழப்பதாகத் தெரிவிக்கின்றார்கள் மருத்துவ நிபுணர்கள். எனவே மருத்துவரை கலந்தாலோசித்த பிறகே அப்படிக் கொடுப்பது நல்லது. அப்படியே கொடுப்பதானாலும் முன்கூட்டியே உணவையும் மருந்தையும் கலந்து வைக்காமல், சாப்பிடக் கொடுப்பதற்கு முன் கலக்கவும்.

உங்கள் குழந்தைக்கு மருத்துவர் பத்து நாட்கள் கொடுக்கச் சொல்லி ஆன்டிபயாடிக் மருந்துகளைப் பரிந்துரைக்கலாம். குழந்தைகளின் உடல் நலம் தேறுவது தெரிந்தும் ஐந்து அல்லது ஆறு நாட்களிலேயே மருந்துகளை நிறுத்தக் கூடாது. இதனால் அரை குறையாகத் தேறிய குழந்தையின் உடல் நிலை இன்னும் மோசமாகலாம்.

சாதரண தும்மல், இருமல் போன்றவற்றுக்கெல்லாம் மருந்து மாத்திரைகளைக் கொடுத்து குழந்தைகளைப் பழக்க வேண்டியதில்லை. நோய் தீவிரமாகிவிடுமோ என்ற பயத்தில் மருந்துகளைக் கொடுப்பது பக்க விளைவுகளையே ஏற்படுத்தும்.

போனமுறை உங்கள் குழந்தைக்கு ஏற்பட்ட அதே பாதிப்பு இந்த முறையும் ஏற்படலாம். அறிகுறிகள் ஓரே மாதிரி இருப்பதைப் பார்த்து, போன முறை கொடுத்த அதே மருந்து மாத்திரைகளைக் கொடுப்பது ஆபத்தானது. அதே போல காலாவதியான மருந்து, மாத்திரைகளை உடனுக்குடன் அப்புறபடுத்த வேண்டும்.

பெரியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் ஓரே மாதிரி அறிகுறிகள் தென்படும் போது, பெரியவர்களது மருந்து மாத்திரைகள் அளவைக் குறைத்து குழந்தைகளுக்குக் கொடுப்பது பயங்கரமானது. மருந்தின் சக்தியை எதிர் கொள்ள முடியாமல் அது குழந்தையின் உயிருக்கே ஆபத்தாக அமையலாம்.

மருத்துவர் பரிந்துரைத்த பட்டியலில் உள்ளவையும், கடையில் வாங்கியவையும் ஒரே மருந்துதானா என்பதை முதலில் சரிபார்க்க வேண்டும். பிறகு அதன் லேபிளின் மீதுள்ள எச்சரிக்கைகளையும் கொடுக்கும் முறைகளையும் படிக்க வேண்டும்.

Leave a Reply