shadow

கண்களைப் பாதிக்கும் ஒளிர்திரை

eyesகம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம் தவிர்ப்போம்!

நீங்கள் ஒரு நாளில் எத்தனை முறை, எவ்வளவு நேரம் செல்போன், லேப்டாப், கணினி, டி.வி போன்ற டிஜிட்டல் திரைகளைப் பார்க்கிறீர்கள் என ஒரு பேப்பரில் பட்டியலிடுங்கள். கட்டுரைக்குச் செல்லும் முன்னர் மறக்காமல் பட்டியலிட்டுவிட்டுப் படியுங்கள். என்ன அதிர்ச்சியாக இருக்கிறதா? ‘அட! இவ்வளவு நேரம் நாம் இதில் செலவிடுகிறோமா’ என ஆச்சர்யப்படுகிறீர்களா? நீங்கள் மட்டும் அல்ல, இன்றைய தலைமுறையே டிஜிட்டல் திரை முன்தான் அமர்ந்திருக்கிறது. சிலருக்கு வேலை, சிலருக்குப் பொழுதுபோக்கு எனப் பல காரணங்கள் உள்ளன. அதனால் என்ன என்று கேட்கலாம். ‘கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்’ எனும் பிரச்னை, தற்போது வேகமாக அதிகரிக்க இதுதான் காரணம்.

கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்

கணினித் திரையில் அதிக நேரம் செலவிடுவதால் கண் சிவந்துபோதல், கண் எரிச்சல் முதலான கண்களில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளையும் ‘கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்’ என்கிறோம்.

இயற்கையாகவே நமது கண்களின் வடிவமைப்பு மிகவும் நுட்பமானது. தூரத்தில் இருக்கும் பொருளையும், அருகில் இருக்கும் பொருளையும் நாம் விரும்பியபோது பார்ப்பதற்கு ஏதுவாக நமது கண்களில் உள்ள லென்ஸ்கள் அமைந்திருக்கின்றன. அருகில் இருக்கும் பொருளைப் பார்க்கும்போது, நமது கண்ணில் இருக்கும் லென்ஸ் விரியும், தொலைவில் இருக்கும் பொருளைப் பார்க்கும்போது லென்ஸ் சுருங்கும்.

கணினிகள் வரும் முன்பாக, மக்களுக்குக் கண்ணில் இருக்கும் லென்ஸ் அவ்வளவு எளிதில் பாதிப்பு அடையாமல்தான் இருந்தது. ஆனால், கணினி வேலை என்ற சூழ்நிலை வந்த பிறகு, இந்தப் பிரச்னை அதிகரித்திருக்கிறது. திரையை அருகில் பார்க்கும்போது, கண்களில் உள்ள லென்ஸ் விரிவடைகிறது. நாம் எப்போதுமே அருகில் இருக்கும் பொருளையோ அல்லது தூரமாக இருக்கும் பொருளையோ மட்டும் அதிக நேரம் தொடர்ந்துப் பார்த்துக்கொண்டிருக்க கூடாது. ஏனெனில், கண்களில் உள்ள லென்ஸுக்கு சுருங்கி விரியும் தன்மை, குறைந்துவிடும். கண்ணின், ‘சிலரி தசைகள்’ சோர்வடைகின்றன. இதனால், கண்களில் வெவ்வேறு பிரச்னைகள் வருகின்றன.

கணினிக்கு அருகில் அதிக நேரம் இருக்கும்போது அதன் வெளிச்சத்தால் கண்ணில் இருக்கும் ‘டியர் ஃபிலிம்’ பாதிப்படைகிறது. கண்களில் உள்ள நீர் ஆவியாகிவிடக் கூடாது என்பதற்காக இயற்கையாகவே கஞ்சக்டைவா மேலே கண்ணீர்த் திரை இருக்கிறது. இந்தக் கண்ணீர்த் திரை மூன்று அடுக்குகளால் ஆனது. கீழ் அடுக்கு மியூக்கஸ் லேயர்களாலும், நடு அடுக்கு அக்குவஸ் லேயராலும், மேல் அடுக்கு ஆயில் லேயராகவும் இருக்கும். ஆயில் லேயர் இருப்பதால்தான் கண்ணீர் ஆவியாகிவிடாமல் தடுக்கப்படுகிறது. கணினி வேலை காரணமாக, கண்ணீர்த் திரை பாதிக்கப்படும்போது, கண்களில் ஈரப்பதம் குறைந்து வறட்சி ஏற்படலாம். இதனால், கண்கள் சிவந்துபோகும். சில நேரங்களில் விழித்திரையில் கறுப்பு நிறப் புள்ளிகள் தோன்றும். இது போன்ற பிரச்னைகளால் பார்வைத்திறன் குறையும். கண்ணில் இருந்து கண்ணீர் வடிந்துகொண்டே இருக்கும். கண்ணில் எரிச்சல் ஏற்படும்.

விழித்திரையின் (ரெட்டினா) நடுப்பகுதியில் ஃபோவியா (Fovea) இருக்கிறது. வெளிச்சம் இதில் பட்டுத்தான் நமக்குத் தெரிகிறது. கணினி மற்றும் மொபைல் திரைகளில் இருந்து அதிக வெளிச்சம் கண்களில் பாயும்போது, இந்த ஃபோவியா பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதனால், கண்களின் பவர் குறையும். சிலருக்கு கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம் காரணமாக மயோபியா பிரச்னை ஏற்பட வாய்ப்பு உண்டு.

மூன்று வருடங்களுக்கும் மேல் தொடர்ந்து 8-10 மணி நேரம் வரை இடைவெளி இல்லாமல் கணினியில் வேலை செய்பவர்களுக்கு கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம் பிரச்னை அதிகம். அமெரிக்கா போன்ற நாடுகளில் கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம் பிரச்னைத் தீவிரமாகவே, பல நிறுவனங்களில் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை அலுவலகத்தில் இருக்கும் ஒட்டுமொத்த கணினிகளும் அணைத்துவிட்டு மறுபடியும் இயக்கப்படுகின்றன. கண்களுக்கு இரண்டு நிமிடங்களாவது ஓய்வு அவசியம் என்பதைக் கருத்தில்கொண்டு பல நிறுவனங்கள் இந்த முறையைக் கடைப்பிடிக்கின்றன.

கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம் பாதிப்புகள்

கண்கள் சிவத்தல், வறட்சி, கண்ணீர் வடிதல் போன்ற பிரச்னைகள் ஆரம்பகாலத்தில் இருக்கும். பிரச்னை தீவிரமானால், பார்வையே பறிபோகக்கூடும். கண்ணீர்த் திரை பாதிக்கப்பட்டால், கண்களில் சொட்டு மருந்துவிட்டு குணப்படுத்த ஓரளவு வாய்ப்பு உள்ளது. மேலும் மேலும் பிரச்னை தீவிரமானால், கண்களில் சொட்டு மருந்துவிடும் நேர இடைவேளை குறைக்கப்படும். அதற்கு அடுத்த நிலையில் கண்களில் ஜெல் விடும் சிகிச்சை பரிந்துரைக்கப்படும். ஒரு சிலருக்கு சிறுசிறு அறுவைசிகிச்சைகள்கூட தேவைப்படலாம். கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம் பிரச்னையைப் பொறுத்தவரை மிக எளிதில் தடுக்க முடியும். இதற்கு தினமும் சில நிமிடங்களை ஒதுக்கினாலே போதுமானது.

Leave a Reply