களக்காடு: நெல்லை மாவட்டம் கண்ணுகுட்டி பொத்தை மலையடிவாரத்தில் இருந்து 2 குட்டிகள் உள்பட 10 யானைகள் வெளியேறி நேற்று அதிகாலை பூதத்தான்குடியிருப்பு ஊருக்குள் புகுந்தன.அவை அங்குள்ள விவசாய தோட்டங்களில் நுழைந்து 20 பனை மரங்களை வேரோடு பிடுங்கி வீசின. மோட்டார்கள், தண்ணீர் குழாய்களையும் மிதித்து நாசப்படுத்தின.தேக்கு, மா மரங்களை துவம்சம் செய்தன. இதனால், விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் சேதம் ஏற்பட்டுள்ளது.தகவல் அறிந்தது அங்கு வந்த 50க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நெல்லிமலை வனப்பகுதியில் இருந்து நேற்று முன்தினம் இரவு குட்டி உள்பட 3 யானைகள் குரும்பனூர் பகுதியில் வாழைத் தோட்டத்தை நாசப்படுத்தின. அப்பகுதி பொதுமக்கள் பட்டாசு வெடித்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.இதில் வழி தவறிய ஒரு யானை தாசம்பாளையத்தில் உள்ள ஆண்டிகாடு என்ற இடத்தில் நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் சென்ற தாசம்பாளையத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் நஞ்சப்பனை (70) மிதித்து கொன்றது.இதையடுத்து வனத்துறையை கண்டித்து தாசம்பாளையம் ஊர் மக்கள் போராட்டம் நடத்தினர்.

Leave a Reply