ஜெயலலிதா-கனிமொழி-பிரேமலதாவை அடுத்து பாமகவிலும் ஒரு பெண் தலைவர்?
2016 சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளரை முதன்முதலாக அறிவித்துவிட்டு தனித்து போட்டியிடும் பாமக, திமுகவை விமர்சனம் செய்யும்போதெல்லாம் குடும்ப அரசியல் குறித்து பேசி வருகின்றது. இந்நிலையில் ராமதாஸ், அன்புமணியை அடுத்து அன்புமணியின் மனைவி செளமியாவும் அரசியலில் குதிக்கவுள்ளாராம்.
ஏற்கனவே அன்புமணி தருமபுரி தொகுதியில் போட்டியிட்டபோது அன்புமணிக்காக தேர்தல் பிரச்சாரம் செய்த செளமியா, தற்போது பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடவுள்ளதாக பாமக தரப்பில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
தற்போது பசுமைத்தாயகத்தின் தலைவராக இருக்கும் செளமியா இதுவரை கட்சியில் எந்த பதவியும் வகிக்கவில்லை என்றாலும் அவருக்கு அரசியல் நன்கு தெரியும். ஏற்கனவே அன்புமணியின் பிரசார உடைகளை செலெக்ட் செய்வது, அன்புமணி கொடுக்க போகும் பேட்டிக்கு தயார் செய்து கொடுப்பது, வெளிநாட்டில் இருக்கும் தகவல்களை படித்து புதுப்புது ஐடியாக்கள் கொடுப்பது என எல்லாமே செளமியாதானாம்.
இதுகுறித்து தருமபுரி மாவட்டத்தின் மாநில துணைப்பொதுச்செயலாளர் சரவணின் அவர்கள் கூறியபோது, “அதெல்லாம் இல்லை என அன்புமணி மறுத்துவிட்டார். தலைமை என்ன முடிவெடுக்கிறதோ அதுதான் எங்கள் முடிவு. ஒரு வேளை செளமியாவை தலைமை நிறுத்தினால் கட்டாயமாக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்க வைப்போம். அவர் பிறந்த இடமும் சரி, புகுந்த இடமும் சரி, இரண்டுமே அரசியல் பாரம்பர்யம் கொண்ட குடும்பம். எனவே அவருக்கு குழந்தையிலிருந்து அரசியல் தெரியும். அவரெல்லாம் தீவிர அரசியலில் நுழைந்தால் தமிழகத்துல குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஒரு தலைவராக வந்துவிடுவார்” என்று கூறினார்.
அதிமுகவில் ஜெயலலிதா, திமுகவில் கனிமொழி, தேமுதிகவில் பிரேமலதா, பாஜகவில் தமிழிசை செளந்தரராஜன் போல இனி பாமகவின் பெண் தலைவர் என்றால் செளமியாதன் என்ற நாள் வெகுதூரத்தில் இல்லை.
Leave a Reply
You must be logged in to post a comment.