shadow

கொழுந்துவிட்டு எரியும் ஜல்லிக்கட்டு போராட்டம். வாய்மூடி மெளனியாக இருக்கும் அரசியல்வாதிகள்

இன்று தமிழகம் முழுக்க பற்றி எரிந்து கொண்டிருக்கும் பிரச்சனை ஜல்லிக்கட்டு. ரோம் நகர் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கும் போது பிடில் வாசித்து கொண்டிருந்த மன்னன் போல, தமிழகமே போர்க்களமாகியுள்ள இந்த நேரத்தில் முதலமைச்சர் உள்பட அமைச்சர்கள் அனைவரும் என்ன செய்து கொண்டிருக்கின்றனர் என்பது தெரியவில்லை

கடந்த இரண்டு ஆண்டுகளை போல இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போராட்டத்தை நடத்துவது ஒருசில தமிழ் அமைப்புகள் மட்டுமல்ல, ஒட்டு மொத்த தமிழினமே களத்தில் இறங்கியுள்ளது. ஐடி ஊழியர்கள் முதல் நர்சுகள் வரை, மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் என அனைவரும் தமிழ் உணர்வுடன் களத்தில் இறங்கியுள்ளனர். ஒருவகையில் தமிழர்கள் அனைவரையும் ஒற்றுமையாக்கிய நமது எதிரிகளுக்கு நாம் நம்முடைய நன்றியை தெரிவித்து கொள்ள வேண்டும்

பீட்டா அமைப்பு கொடுத்த ஒருசில வீடியொ ஆதாரங்களை மட்டுமே கருத்தில் கொண்டு ஜல்லிகட்டுக்கு தடை விதித்துள்ளது உச்சநீதிமன்றம். ஆயிரக்க்கணக்கான வருடங்களின் கலாச்சாரம், பண்பாடு, தமிழர்களின் உணர்வுகள் ஏதேனும் அந்த நீதிபதிகளுக்கு தெரியுமா? இவற்றையெல்லாம் தெரிந்த ஒரு நீதிபதி தடை போட முன்வருவாரா? என்ற கேள்வியே பலருக்கு எழுகின்றன

சேது சமுத்திர திட்டம் குறித்த வழக்கில் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து தீர்ப்பு அளித்த நீதிமன்றம், விநாயகர் சதூர்த்தி விழாவிற்கு தடை கேட்ட வழக்கில் வழிபாட்டு வழிமுறைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று தீர்ப்பு அளித்த நீதிமன்றம், தற்போது கோடிக்கணக்கான தமிழ் நெஞ்சங்களின் உணர்வுக்கு மதிப்பளிக்காமல் தடை போட்டது ஏன் என்பதுதான் ஆறு கோடி தமிழர்களின் கேள்வியாக உள்ளது.

திவாகரன் கட்சிக்கு என்ன செய்தார்? என்று ஒரு அமைச்சர் கேள்வி கேட்டவுடன் 32 அமைச்சர்களும் மாறி மாறி அவருக்கு பதில் கூறி கண்டனம் தெரிவித்த நிலையில் அந்த அமைச்சர் பதவியில் ஓட்டு போட்டு உட்கார வைத்த தமிழக மக்கள் போராட்டம் குறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் அனைத்து அமைச்சர்களும் மெளனம் காப்பது ஏன் என்பது புரியாத புதிராக உள்ளது. ஜல்லிக்கட்டு நடத்தினால் ஆட்சியை கலைக்க வேண்டும் என்று கூறும் சுப்பிரமணியன் சுவாமி உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் தண்ணீர் தரமுடியாது என்று கூறிய கர்நாடக அரசை ஏன் கலைக்கவில்லை? காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் கூறியபோது அதற்கு மறுப்பு தெரிவித்த மத்திய அரசை ஏன் கலைக்க சொல்லவில்லை சுப்பிரமணியன்சுவாமி?

மக்களின் வாழ்வை சரிப்படுத்தவே சட்டமே தவிர, சட்டத்திற்காக மக்கள் இல்லை. மாடுகள் கொடுமைப்படுத்துவதற்காக தடை போட்ட நீதிமன்றம், இன்று மனிதர்கள் மேல் தடியடி நடத்தி கொடுமைப்படுத்தும் காவல்துறையிடம் ஏன் கேள்வி கேட்கவில்லை. தடியடி நடத்தும் அளவுக்கு போராட்டக்காரர்கள் என்ன தீவிரவாதிகளா? போராட்டக்காரர்களுக்கு உணவு, தண்ணீர், அடிப்படை வசதிகள் கூட செய்து தராமல் கிட்டத்தட்ட இரண்டாவது ஜாலியன் வாலாபாக் படுகொலை போல நேற்று அலங்காநல்லூரில் நடந்துள்ளது. இதற்கு யார் காரணம்?

ஒவ்வொரு வருடமும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்க்க உலகம் முழுவதிலும் இருந்து வெளிநாட்டினர் வருவது வாடிக்கை. பொங்கல் சமயத்தின்போது கொடுக்கப்பட்ட விசாக்களை கணக்கிட்டால் உண்மை தெரியவரும். ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக சுற்றுலாத்துறைக்கு இந்த தடையால் ஏகப்பட்ட நஷ்டம் ஏற்பட்டுள்ளதே, இதை மாநில அரசோ, அல்லது மத்திய அரசோ கவனித்ததா?

கனடா நாட்டின் பிரதமர் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். கனடாவில் தாராளமாக ஜல்லிக்கட்டை நடத்துங்கள் என்று கூறுகிறார். ஆனால் இந்திய பிரதமர் மட்டும் இந்த விஷயத்தில் மெளனம் காப்பது ஏன்?

72 நாட்கள் அப்பல்லோ முன்னாள் விடிய விடிய நின்று செய்தி சேகரித்த தொலைக்காட்சி ஊடகங்கள், தமிழர்களின் உணர்வு பூர்வமான ஒரு போராட்டத்தை இருட்டடிப்பு செய்வது ஏன்? யாருக்கு பயந்து இந்த நடவடிக்கை. தமிழகமே கொந்தளித்து கொண்டிருக்கும் நிலையில் முன்னணி தொலைக்காட்சி ஒன்று ஒரு நடிகரின் பேட்டியை ஒளிபரப்புகிறது என்றால் இந்த போராட்டத்தை அந்த தொலைக்காட்சி என்ன நினைக்கிறது? வெறும் ஆயிரம் உறுப்பினர்கள் நடத்தும் நடிகர் சங்க தேர்தலை காலை முதல் இரவு முடிவு தெரியும் வரை நேரடி ஒளிபரப்பு செய்த தொலைக்காட்சிகள் இன்று பதுங்குவதற்கு காரணம் பணமா? அல்லது பயமா?

எந்த ஊடகமும் எங்களுக்கு தேவையில்லை, எந்த அரசியல்வாதியும் எங்களுக்கு தேவையில்லை, ஜாதி, மத, இன வேறுபாடின்றி நடைபெற்று வரும் அமைதியான இந்த போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும். அந்த வெற்றியை பகிர்ந்து கொள்ள தயவு செய்து எந்த கட்சியும் வரவேண்டாம். இந்த போராட்டம் வெற்றி பெற்றால் அந்த வெற்றிக்கு முழு பொறுப்பு தமிழக இளைஞர் பட்டாளம்தான் என்பதை நினைவில் வைத்து கொள்ள வேண்டும்

இந்த போராட்டம் ஜல்லிக்கட்டு தடைக்காக மட்டும் அல்ல. பீட்டாவை ஓட ஓட இந்தியாவை விட்டு விரட்டுவதற்கும்தான். ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றி பெற்றவுடன் தமிழர்களின் அடுத்த குறி பீட்டாதான். பீட்டாவே இந்தியாவை விட்டு வெளியேற தயாராக இரு…

Leave a Reply