சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை ஜாமீனில் விடுவிக்க முதலில் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துவிட்டு பின்னர் திடீரென எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன், என்பது குறித்து அரசு வழக்கறிஞர் பவானி சிங் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்ட்னை பெற்று வரும் ஜெயலலிதா கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கடந்த மாதம் 29ஆம் தேதி ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். அவருடைய ஜாமீன் மனுவை கடுமையாக எதிர்த்து அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று அரசு வழக்கறிஞர் பவானி சிங் முதலில் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். ஆனால் திடீரென மதிய உணவு இடைவெளிக்கு பின்னர் பவானிசிங், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு விசாரணையின் போது எதிர்ப்பு தெரிவிக்காதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள பவானி சி்ங், 29ஆம் தேதி ஜெயலலிதா ஜாமீன் மனு தாக்கல் செய்தபோது, 4 ஆண்டு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் ஜெயலலிதா தரப்பில் கோரிக்கை விடுத்ததால் தான் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், ஆனால் நேற்று நடைபெற்ற விசாரணையின் போது, ஜெயலலிதா தரப்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, தண்டனை நிறுத்தி வைக்க வலியுறுத்தவில்லை என்றும் ஜாமீன் மட்டும் வழங்கினால் போதும் என்றும் வாதாடியதாகவும் பவானி சிங் தெரிவித்துள்ளார்.
ஜாமீன் வழங்க நீதிபதி விதிக்கும் எந்த நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்ள தயார் என்றும் ராம்ஜெத் மலானி வாதாடியதால் தனது நிலைப்பாட்டை மாற்றிகொண்டதாகவும் பாவானி சிங் விளக்கம் அளித்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.