அடுத்த ஐ.நா.பொதுச்செயலாளர் யார்? சஸ்பென்ஸ் நீடிக்கின்றது
இந்த ஆண்டுடன் ஐ.நா.வின் தற்போதைய பொதுச் செயலர் பான் கி-மூனின் பதவிக் காலம் முடிவடைய உள்ளதால் அடுத்தப் பொதுச் செயலரைத் தேர்வு செய்யப்படுவதற்கான ரகசிய வாக்குப் பதிவு, சமீபத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 12 பேர் அந்தப் பதவிக்காகப் போட்டியிடுகின்றனர்.
ஐ.நா. விதிமுறைகளின்படி, பாதுகாப்புக் கவுன்சில் பரிந்துரையின் அடிப்படையில், 193 உறுப்பினர்களைக் கொண்ட பொதுக் குழு ஐ.நா. பொதுச் செயலரைத் தேர்வு செய்யும். தேர்வு செய்யப்பட்ட ஐ.நா பொதுச் செயலரை ஏற்க மறுக்கும் அதிகாரம் பாதுகாப்புக் கவுன்சில் நிரந்தர உறுப்பு நாடுகளுக்கு உண்டு.
சுழற்சி முறையில் ஒவ்வொரு பிராந்தியத்தைச் சேர்ந்தவருக்கும் பொதுச் செயலளார் பதவி அளிக்கப்பட்டு வரும் நிலையில் ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள் ஏற்கனவே இந்த பதவியை பெற்றுள்ளனர். இந்நிலையில் , பான் கி-மூனுக்கு அடுத்து தங்கள் நாடுகளைச் சேர்ந்தவர்கள்தான் அடுத்த பொதுச் செயலராக வேண்டும் என்று ரஷியா மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. மேலும் இம்முறை 6 பெண்கள் இந்த பதவிக்காக போட்டியிடுவதால், ஒரு பெண் ஐ.நா.பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.