shadow

டெல்லி முதல்வர் செய்வது சரியா? உயர்நீதிமன்ற நீதிபதிகள் காட்டமான கேள்வி

டெல்லியில் ஐஏஎஸ் அதிகாரிகள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரக் கோரிக்கை விடுத்து துணை நிலை ஆளுநர் இல்லத்தில் கடந்த ஒரு வாரமாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், துணை முதல்வர் ஷிசோடியா, அமைச்சர்கள் சிலர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனு நீதிபதிகள் ஏ.கே. சாவ்லா, நவீன் சாவ்லா ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் டெல்லி அரசு சார்பாக ஆஜராகி இருந்த வழக்கறிஞர்களை நோக்கி சரமாரிக் கேள்விகளை எழுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

துணை நிலை ஆளுநர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடத்த உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? நீங்கள் போராட்டம் நடத்துவதென்றால் துணை நிலை அலுவலகத்துக்கு வெளியே நடத்தலாம். நீங்கள் அலுவலகத்துக்குள் அமர்ந்து போராட்டம் நடத்துவதற்கு யார் அனுமதி அளித்தது. வேறு ஒருவருடைய வீட்டிலோ அல்லது அலுவலகத்துக்குள் அமர்ந்து போராட்டம் நடத்த முடியாது என்று நீதிபதிகள் காட்டமாகத் தெரிவித்தனர்.

இதற்கு டெல்லி அரசு சார்பில் ஆஜராகிய மூத்த வழக்கறிஞர் சுதிர் நந்த்ராஜக் வாதாடுகையில், \முதல்வர் கேஜ்ரிவாலும், அமைச்சர்களும் அவர்களுக்கு இருக்கும் தனிப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையில்தான், அரசியலமைப்புக்கு உட்பட்டுத்தான் போராட்டம் நடத்தினார்கள். இந்த விஷயத்தில் நீதிமன்றம் ஐஏஎஸ் அதிகாரிகளுக்குத்தான் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அமைச்சர்களுடன் அவர்கள்தான் துறை ரீதியான கூட்டங்களில் பங்கேற்க மறுக்கிறார்கள். ஆனால், அவர்களோ போராட்டம் நடத்தவில்லை என்று நேற்று கூறியிருக்கிறார்கள் ஆதலால், போராட்டம் தொடராமல் இருக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

மத்திய அரசு தார்பில் ஆஜராகிய வழக்கறிஞர், ஐஏஎஸ் அதிகாரிகள் எந்தவிதமான போராட்டங்களும் நடத்தவில்லை. துணை நிலை ஆளுநர் இல்லத்தில் இருந்து முதல்வர் கேஜ்ரிவால், அமைச்சர்களை வெளியேற உத்தரவிட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் எந்தவிதமான உத்தரவும் பிறப்பிக்காமல், வழக்கை வரும் 22-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Leave a Reply