பிரபல நடிகை அசின், மைக்ரோமேக்ஸ் நிறுவன அதிபர் ராகுல் சர்மாவை மணக்க இருக்கின்றார் என்ற தகவல் நேற்று வெளியானது. இதை இருவருமே மறுக்கவில்லை என்பதால் இந்த செய்தி உண்மை என்பதும் விரைவில் இவர்கள் திருமணம் நடப்பது உறுதியாகி உள்ளது. இந்நிலையில் தொழிலதிபர் ராகுல் சர்மாவுக்கும் அசினுக்கும் காதல் மலர்ந்தது எப்படி? என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
36 வயதான ராகுல்சர்மாவின் நெருங்கிய நண்பர் பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷயகுமார். அக்ஷயகுமாருடன் அசின் நடித்த ‘கில்லாடி 786’ என்ற படத்தின் படப்பிடிப்பை பார்ப்பதற்காக ராகுல் சர்மா ஒருசயம் சென்றிருந்தபோது தனக்கு ஜோடியாக நடிக்கும் அசினை ராகுல் சர்மாவுக்கு அக்ஷய்குமார் அறிமுகம் செய்து வைத்தார்.
பின்னர் அக்ஷய்குமார் பங்கேற்கும் சினிமா விருந்துகளிலும் அசின் பங்கேற்றபோது அதே விருந்துகளில் பங்கேற்ற ராகுல் சர்மாவை அடிக்கடி சந்தித்தார். இந்த சந்திப்புகள் நாளடைவில் இருவருக்கும் காதல் மலர காரணமாக இருந்துள்ளது.
ராகுல்சர்மா இசை மீது அதிக ஆர்வம் கொண்டவர். விலை உயர்ந்த புதுப்புது கார்களில் சுற்றுலா தலங்களுக்கு செல்லும் ஆர்வம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக அசினும் ராகுல் சர்மாவும் அடிக்கடி சந்தித்துக் கொண்டனர். அப்போது மனம் விட்டு பேசினார்கள். சமீபத்தில் இரண்டு பேரும் ஒரு காரில் உட்கார்ந்து தங்களை மறந்து பேசிக் கொண்டிருந்ததை, பத்திரிகையாளர் ஒருவர் பார்த்து விட்டார். அவர் படம் எடுக்க முயற்சி செய்ய அசின் சண்டைக்கே போய் விட்டார்.
இந்த சம்பவத்துக்குப்பிறகு அசின்-ராகுல் சர்மா காதல் வெளிச்சத்துக்கு வந்தது. இப்போது கல்யாணம் நடக்கப்போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்காக படத்தில் நடிப்பதை அசினும் குறைத்து விட்டார் என்று கூறப்படுகிறது. இவர்களுடைய திருமணம் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறும் என கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.