வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பவர்களை பிடிக்க வாட்ஸ் அப் பயன்படுத்தப்படும். தேர்தல் அதிகாரி
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மதுரையில் நடைபெற்ற இடைத்தேர்தலின்போது திமுகவை வெற்றி பெற வைக்க வாக்காளர்களுக்கு பெரிய தொகையாக பணம் கொடுக்கும் முறையை அறிமுகப்படுத்திய பெருமை திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரிக்கு உண்டு. இந்த நடைமுறை அடுத்தடுத்து வரும் தேர்தலில் கடைபிடிக்கப்பட்டு தற்போது ஒரு ஓட்டுக்கு ரூ.500 முதல் ரூ.2000 வரை கொடுக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்நிலையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் கமிஷன் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த விஷயத்தில் வரும் தமிழக சட்டமன்ற தேர்தலின்போது சமூக வலைத்தளங்களை தேர்தல் கமிஷன் உபயோகிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
தேர்தலின்போது வாக்காளர்களுக்கு எந்த கட்சியினராவது பணம் கொடுப்பதை யாராவது பார்த்தால் உடனே அதை புகைப்படம் எடுத்து தேர்தல் கமிஷனுக்கு வாட்ஸ்-அப் மூலம் அனுப்பினால் அந்த புகைப்பட ஆதாரத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் அவருடைய கட்சி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதேபோல் இமெயில் மூலமும் புகைப்பட புகார்களை சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பினால் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிடப்படும் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி செய்தியாளர்களிடம் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் தேர்தல் சமயத்தில் அரசியல் கட்சிகள் நடத்தும் ஊர்வலங்கள், பொதுக்கூட்டம், ஆகியவற்றுக்கு இதுவரை நேரில் வந்து அனுமதி கேட்கும் வழக்கம் இருந்தது. ஆனால் இதனால் ஏற்படும் கால விரையத்தை தவிர்க்க ஆன்லைன் மூலம் அரசியல் பொதுக்கூட்டங்களுக்கு விண்ணப்பித்து அதன்மூலமே அனுமதி பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.