shadow

5aமாற்றுத்திட்டம் பின்பற்றி, அதிக நன்மை பெறும், மேஷ ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு தன சப்தம ஸ்தான அதிபதியாகிய சுக்கிரன், ராசியில் அனுகூலமாக உள்ளார். செவ்வாய் ஆறாம் இடத்தில், கூடுதல் நற்பலன் தரும் வகையில் செயல்படுகிறார். பணிகளை புதிய யுக்தியுடன் துவங்குவீர்கள். வளர்ச்சிப் பாதைக்கான வழிதிறக்கும். குடும்பச்செலவு திட்டமிட்டதை விட கொஞ்சம் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களின் அக்கறை மிகுந்த கருத்தை விமர்சிக்க வேண்டாம். புத்திரரின் உடல்நலத்திற்கு, பலம் சேர்க்க சத்து நிறைந்த உணவு வழங்குவீர்கள். எதிர்ப்பாளரால் வருகிற தொல்லை விலகும். இல்லறத்துணை உங்களை கண்ணும் கருத்துமாக வழிநடத்துவார். தொழில், வியாபாரத்தில் சராசரி உற்பத்தி, பணவரவு இருக்கும். பணியாளர் கால அவகாசத்தில், பணி இலக்கு நிறைவேற்றி நற்பெயரை பாதுகாத்திடுவர். பெண்கள், கணவரின் மனம் அறிந்து உதவிகரமாக செயல்படுவர். மாணவர்கள், நண்பரின் குடும்ப சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வர்.

பரிகாரம்: மகாலட்சுமியை வழிபடுவதுடன், தந்தையின் ஆதரவு இல்லாத குழந்தைக்கு உதவுவதாலும் நன்மை உண்டாகும்.

 

அடுத்தவர் தரும் உதவியை, அளவுடன் ஏற்கும் ரிஷப ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு இரண்டில் குரு, ஆறாம் இடத்தில் சனி, ராகு, பன்னிரெண்டில் சுக்கிரன், அனுகூல அமர்வில் உள்ளனர். மனதில் புதிய உற்சாகத்துடன் நிலுவைப்பணிகளை நினைவுபடுத்தி நிறைவேற்றுவீர்கள். பணவசதி திருப்திகர அளவில் இருக்கும். அக்கம் பக்கத்தவர் அன்பு நிறைந்த மனதுடன் பழகுவர். தொலைதூர பயணம் பயனறிந்து மேற்கொள்வதால், சிரமம் அணுகாமல் தவிர்க்கலாம். புத்திரரின் பிடிவாத குணத்தை, இனிய அணுகுமுறையால் மாற்றுவீர்கள். பணக்கடன் பெருமளவில் குறைந்து, சேமிப்பு உருவாகும். இல்லறத்துணை வழிசார்ந்த உறவினர், உதவிகரமாக நடந்து கொள்வர். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற, கூடுதல் ஆர்டர் கைகொடுத்து உதவும். பணியாளர்கள், பணியிடத்தில் தேவையற்ற விஷயம் பேசுவதை தவிர்ப்பீர்கள். பெண்கள், ஆடை, அலங்காரப்பொருட்கள் வாங்குகின்ற எண்ணம் நிறைவேறும். மாணவர்கள் வெளியிடம் சுற்றுவதை குறைத்துக் கொள்வது நல்லது.

பரிகாரம்: தட்சணாமூர்த்தியை வழிபடுவதுடன், ஊனமுற்றோருக்கு உதவுவதால், கூடுதல் பணவரவு குடும்பத்தில் மங்கல நிகழ்வு உருவாகும்.

 

தன்னிடம் பழகுபவர்களுக்கு, உரிய மரியாதை தரும், மிதுன ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு, லாப ஸ்தானமாகிய பதினொன்றாம் இடத்தில் அசுர கிரகம் கேது, அசுர குருவாகிய சுக்கிரன், அனுகூல அமர்வில் உள்ளனர். கடந்த கால நல் உழைப்பிற்கான பலன், அதிர்ஷ்ட தேவதை யின் அருளால், முழு அளவில் வந்து சேரும். குடும்ப உறுப்பினர்களின் அத்தியாவசியத் தேவைகளை, மனமுவந்து நிறை வேற்றுவீர்கள். இளைய சகோதரரின் அதிருப்தி, மனதிற்கு ஆறதல் தரும் வகையில் உதவுவீர்கள். வீடு, வாகன பாதுகாப்பில் கூடுதல் கவனம் வேண்டும். புத்திரர் நல்ல நண்பர்களின் அறிமுகம் அமைந்து, பெருமிதம் கொள்வர். எதிர்மறையாக இருக்கிற விஷயங்களை சரி செய்ய, உங்களின் அனுபவ அறிவு வழி சொல்லும். இல்லறத்துணை கருத்து, ஒற்றுமையுடன் அன்பு பாராட்டுவார். தொழிலில் அபிவிருத்தி பணி செய்ய, எதிர்பார்த்த நிதியுதவி பெறலாம். பணியாளர்கள், கூடுதல் வேலைவாய்ப்பு, திருப்திகர பணவரவு பெறுவர். பெண்கள், விதவிதமான உணவு தயாரித்து, குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்குவர். மாணவர்கள், நண்பரிடம் ஞானம் நிறைந்த கருத்துக்களை பகிர்ந்து கொள்வர்.

பரிகாரம்: நாகதேவதையை வழிபடுவதுடன், கன்னி பெண்ணுக்கு மங்கலப்பொருட்கள் கொடுப்பதால் குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும்.

 

பிறர் கருத்தின் நியாயம் உணர்ந்து செயல்படும் கடக ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு மூன்றில் உள்ள செவ்வாய் செயல்கள் நிறைவேறி புகழ் தரும் வகையில் உதவுகிறார். ஆதாய ஸ்தானத்தில் அனுகூலமாக உள்ள சூரியன் புதன், புத ஆதித்ய யோக பலன்’ வழங்குகின்றனர். மதிநுட்பம் நிறைந்தவர்களின் அறிமுகம், உதவி கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் வாழ்வில் வளம் செழிக்க, சில நன்மை செய்வீர்கள். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். புத்திரர், உங்கள் சொல்படி நடந்து, ஒற்றுமை வளர்ப்பர். பணக்கடனில் ஒரு பகுதி செலுத்துவீர்கள். ஒவ்வாத உணவு வகை தவிர்க்கவும். இல்லறத்துணையின் மனக்குறையை சரி செய்வதில், கூடுதல் கவனம் வேண்டும். தொழில், வியாபாரத்தில் முழு கண்காணிப்புடன் செயல்படுவதால் உற்பத்தி, விற்பனை சராசரி நிலையை அடையும். பணியாளர்கள் பணம் மற்றும் பொருள் வகையில், எவருக்கும் பொறுப்பேற்க கூடாது. பெண்கள், உறவினர் குடும்ப விவகாரம் பற்றி கணவரிடம் அதிகம் விவாதிக்க வேண்டாம். மாணவர்கள் சீரான ஓய்வினால், உடல்நல ஆரோக்கியம் பாதுகாக்கலாம்.

பரிகாரம்: விஷ்ணுவை வழிபடுவதுடன், முதியவருக்கு உணவு வழங்குவதால், அரசு உதவி பெறலாம்

 

எண்ணத்திலும், செயலிலும் உறுதி நிறைந்த சிம்ம ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு, இந்த வாரம் நவக்கிரகங்களில் செவ்வாய், கேது தவிர மற்ற கிரகங்கள் அனுகூலமாக உள்ளனர். மனதில் சந்தோஷம் நிறைந்து பணிகளை எளிதாக நிறைவேற்றுவீர்கள். விலகிச் சென்ற உறவினர் விரும்பி சொந்தம் பாராட்டுவர். நீண்டதூர வாகன பயணத்தில் மித வேகம், உரிய பாதுகாப்பு பின்பற்றவும். புத்திரர் சாத்விக குணத்துடன் செயல்பட்டு, நற்பெயர் பெறுவர். உடல்நல ஆரோக்கியம் சீராக இருக்கும். நிலுவைப் பணம் வசூலாகும். இல்லறத்துணை விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை, மகிழ்ச்சி கூடும். தொழில் வளர்ச்சி பெற, தேவையான அரசு உதவி எளிய முயற்சியால் கிடைக்கும். பணியாளர்கள், சிறப்பாக பணி செய்து பாராட்டு, வெகுமதி பெறுவர். பெண்கள், கணவரின் நல் அன்பு, தாராள பணவசதி கிடைத்து, மகிழ்ச்சி கர வாழ்வு நடத்துவர். மாணவர்கள், அதிக விலையுள்ள பொருள் கவனமுடன் பயன்படுத்தவும்.

சந்திராஷ்டமம்: 24.5.14 இரவு 12:01 மணி முதல் 25.5.14 மாலை 5:32 மணி வரை.

பரிகாரம்: முருகப் பெருமானை வழிபடுவதுடன், பசுவுக்கு கீரை வழங்குவதால், செயல்களில் வெற்றி அதிகரிக்கும்.

 

குடும்ப உறுப்பினர்களிடம் கூடுதல் பாசமுள்ள, கன்னி ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் உள்ள, சுக்கிரன் மற்றும் தினகதி சுழற்சி கிரகம் சந்திரன் மட்டுமே, நற்பலன் தருகின்றனர். தன்னால் இயலாது என, ஒதுக்கி வைத்த பணியை, சிலரது வற்புறுத்தலினால் செயல்படுத்த முயற்சிக்க வேண்டாம். குடும்பத் தேவை நிறைவேற்ற, அதிக அளவில் பணம் செலவாகும். பொது விவாதங்களில், கருத்து சொல்வதை தவிர்ப்பதால் நற்பெயரை பாதுகாக்கலாம். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்வீர்கள். புத்திரரின் எண்ணங்களை அறிந்து வழி நடத்துவது, குடும்பத்தில் நன்மையை உருவாக்கும். நிர்பந்த பணக்கடனில் ஒரு பகுதி செலுத்துவீர்கள். இல்லறத்துணையின் கூடுதல் அன்பு, பாசம் மனதில் நம்பிக்கை தரும். பெண்கள், குடும்ப பணவரவுக்கேற்ப செலவுகளில் சிக்கனம் மேற்கொள்வர். மாணவர்கள், பெரியவர்களின் நல்ல கருத்துக்களை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வதால், நன்மை உண்டாகும்.

சந்திராஷ்டமம்: 25.5.14 மாலை 5:33 மணி முதல் 27.5.14 இரவு 11:45 மணி வரை.

பரிகாரம்: சனி பகவானை வழிபடுவதுடன், ஏழைக்குழந்தைக்கு வஸ்திர தானம் தருவதால், கூடுதல் பணவரவு பெற வழி பிறக்கும்.

 

நடை, உடை செயலில் வசீகரம் நிறைந்த, துலாம் ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் புதன், ஒன்பதில் குரு அனு கூலமாக உள்ளனர். கடந்த நாட்களில் குழப்பமாக இருந்த பிரச்னையில் அனுகூலம் பெற, புதிய வாய்ப்பு உருவாகும். எவரிடமும் நிதானித்து பேசுவதால், உங்கள் மீதான நல் அபிப்ராயத்திற்கு குறை வராது. வீடு, வாகனத்தில், உரிய பாதுகாப்பு முறை பின்பற்ற வேண்டும். புத்திரரின் வெகுநாள் விருப்பம் பணவசதிக்கேற்ப நிறைவேற்றுவீர்கள். எதிரி சொந்த சிரமங்களால், உங்களுக்கு எதிராக செயல்படுகிற முயற்சியில் தாமதம் ஏற்படும். இல்லறத் துணையின் கருத்துக்கு, உரிய மதிப்பு தருவதால், குடும்ப ஒற்றுமை சிறப்பாக அமைந்திடும். தொழில், வியாபாரத் தில், சில மாற்றம் பின்பற்றி உற்பத்தி, விற்பனையில் இலக்கை அடைவீர்கள். பணியாளர்கள், உடல்நலம் பாதுகாத்தல் வேண்டும். பெண்கள், குடும்பத்தில் உருவாகிற சிறு பிரச்னைகளால் மனம் தளர வேண்டாம். மாணவர்கள், புதிய கலைகள் கற்பதில் ஆர்வம் வளரும்.

சந்திராஷ்டமம்: 27.5.14 இரவு 11:46 மணி முதல் 30.5.14 காலை 8:23 மணி வரை.

பரிகாரம்: விநாயகருக்கு, அருகம்புல் மாலை சாற்றி வழிபடுவதுடன், அவல், பொரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்குவதால், சகல நலமும் கிடைக்கும்.

 

தகுதி மீறிய வாக்குறுதியை தவிர்த்திடும், விருச்சிக ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் உள்ள கேது, ஆதாய ஸ்தானத்தில் உள்ள, செவ்வாய் அனுகூலமான பலன் தருகின்றனர். தன் செயல்கள், எந்த அளவு லாபம் தரும் என்கிற திட்டமிடுதலுடன் செயல்படுவீர்கள். பழகுபவர்களிடம், உங்கள் மீதான நல்ல எண்ணத்திற்கு குறை வராமல் பார்த்துக் கொள்ளவும். உடன் பிறந்தவர்களின் கஷ்ட சூழ்நிலை விலக உதவுவீர்கள். வாகனத்தில் பராமரிப்பு பணி நடத்துவதால், பயணம் எளிதாகும். புத்திரர் சுறுசுறுப்பு, அறிவுத் திறன் பயன்படுத்தி, படிப்பு சார்ந்த புதிய விஷயங்களை அறிந்து கொள்வர். இஷ்ட தெய்வ அருள் பலத்தால், துன்பம் அணுகாத சுமுக வாழ்வு உருவாகும். தொழிலில் அளவான உற்பத்தி, விற்பனை இருக்கும். பணியாளர்கள், பணவரவுக்கேற்ப செலவுகளை ஏற்பது சிரமம் தவிர்க்கும். பெண்கள், கணவரின் அனுமதி இன்றி, உறவினர் பிரச்னையில் சமரசம் பேச வேண்டாம். மாணவர்கள், உயர்ந்த எண்ணங்களினால், நண்பரிடம் நற்பெயர் பெறுவர்.

சந்திராஷ்டமம்: 30.5.14 காலை 8:24 மணி முதல் 31.5.14 அன்று நாள் முழுவதும்.

பரிகாரம்: பைரவரை வழிபடுவதுடன், பறவைகளுக்கு தானியம் தருவதால், தொழில் சார்ந்த இடையூறு விலகும்.

 

வெளிப்படையாக பேசுவதில், தயக்கம் உள்ள தனுசு ராசிக்காரர்களே!

இந்தவாரம், உங்கள் ராசிக்கு செவ்வாய், கேது தவிர பெரும்பான்மை கிரகங்கள் அளப்பரிய, நற்பலன் வழங்குகின்றனர். வாழ்வில் இனிய நிகழ்வு உருவாகி, மனதை மகிழ்விக்கும். புதிய பணிகளை தகுந்த திட்டமிடுதலுடன் நிறைவேற்றுவீர்கள். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களின் உதவி, திருப்திகர அளவில் கிடைக்கும். சிலர் புதிய வீடு, வாகனம் வாங்குகிற முயற்சி நிறைவேறும். புத்திரர் விரும்பிய பொருள் கேட்டு வாங்குவதில் அக்கறை கொள்வர். உடல்நல ஆரோக்கியம் பலம் பெறும். இல்லறத்துணையுடன் விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற, கூடுதல் மூலதனத்தில் அபிவிருத்தி பணி மேற்கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு சலுகை கிடைக்கும். பெண்கள், குடும்ப பணவசதிக்கேற்ப வீட்டு உபயோகப் பொருள், ஆபரணம் வாங்குவர். மாணவர்கள், நல்ல எண்ணம் மனதில் வளர்த்து நண்பர்களுக்கு உதவுவர்.

பரிகாரம்: சிவனை வழிபடுவதுடன் நீர், மோர் தானமாக வழங்கி தாகம் தணிப்பதால் வாழ்வில் ஐஸ்வர்யம் பெருகும்.

 

கருணை மனதுடன், நல்லவர்க்கு உதவுகிற மகர ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் உள்ள கேது மற்றும் தினகதி சுழற்சி கிரகம் சந்திரன் மட்டுமே, நற்பலன் வழங்குகின்றனர். பிறரது புகழ்ச்சி வார்த்தையை கேட்டு, தகுதிக்கு மீறிய எந்த செயலிலும் ஈடுபடக்கூடாது. சிக்கன பணச்செலவில், குடும்பத்தேவை நிறைவேற உதவுவீர்கள். பொது இடங்களில், நிகழ்வுகளை அதிக நேரம் வேடிக்கை பார்க்க வேண்டாம். அலைச்சல் தரும் பயணம் தவிர்ப்பதால் நேரமும், பணமும் மிச்சமாகும். புத்திரரின் கருணை மனம் நிறைந்த செயல்பார்த்து பெருமிதம் அடைவீர்கள். எதிரியின் குணம் உணர்ந்து விலகுவீர்கள். இல்லறத்துணை வழிசார்ந்த உறவினர், கூடுதல் அன்பு பாராட்டுவர். தொழிலில் வருகிற இடையூறு, தாமதமின்றி சரிசெய்வது நல்லது. பணியாளர்கள், நிர்வாகத்தின் சட்டதிட்டம் தவறாமல் பின்பற்ற வேண்டும். பெண்கள், சேமிப்பு பணம் குடும்பத்தின் சிறு செலவுக்கு பயன்படுத்துவர். மாணவர்கள், ஆன்மிக கருத்துகளை அறிவதில் ஆர்வம் கொள்வர்.

பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடுவதுடன், இல்லறத்துணை விரும்பிய பொருள் வாங்கித் தருவதால், குடும்பத்தில் ஒற்றுமை வளரும்.

 

பணிகளில் ஆர்வமுடன் ஈடுபட்டு, அதிக நன்மை பெறும் கும்ப ராசிக்காரர்களே!

இந்தவாரம், உங்கள் ராசிக்கு கேது, சுக்கிரன், புதன், குருவின் நல்லருள் பலமாக உள்ளது. செயல்களில் உத்வேகமுடன் ஈடுபடுவீர்கள். நல்லவர்களின் அறிவுரை, உதவி எதிர்பாராத வகையில் கிடைக்கும். வாழ்வில் பெற்ற நன்மைகளுக்கு, நன்றி சொல்லும் வகையில் இஷ்ட தெய்வ வழிபாடு நடத்துவீர்கள். உறவினர் வருகையால், வீட்டில் மகிழ்ச்சிகரமான சூழல் நிறைந்திருக்கும். புத்திரர், நண்பருக்கு இணையான மனதுடன், உங்களிடம் பழகுவர். உடல்நலம் ஆரோக்கியம் பெற, சிறு அளவிலான மருத்துவ சிகிச்சை மேற்கொள்வீர்கள். இல்லறத்துணை, உங்களின் திறமை வளர தேவையான ஆலோசனை வழங்குவார். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம், தகுந்த உழைப்பு என்ற நடைமுறையை பின்பற்றுவீர்கள். அரசியல்வாதிகள், சமரசபேச்சு வார்த்தையில் நல்லதீர்வு உருவாக்கி நற்பெயர் பெறுவர். பெண்கள், தாய்வீட்டு உதவி கிடைத்து மனம் மகிழ்வர். மாணவர்கள், உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவு உண்ணக்கூடாது.

பரிகாரம்: கிருஷ்ணரை வழிபடுவதுடன், ஏழைக்குழந்தைக்கு கல்வி உபகரணம் வழங்குவதால், தொழிலில் அபிவிருத்தி ஏற்படும்.

 

தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு, பணி நிறைவேற்றும் மீன ராசிக்காரர்களே!

இந்தவாரம், உங்கள் ராசிக்கு இரண்டில் சுக்கிரன், மூன்றாம் இடத்தில் சூரியன் அனுகூலமாக உள்ளனர். வாழ்வியல் நடைமுறை சிறந்து, சமூகத்தில் கூடுதல் நன்மதிப்பு பெறுவீர்கள். பேசும் வார்த்தை மற்றும் செயல், பிறர் நலத்தில் அக்கறை மிகுந்திருக்கும். உங்களை அவமானப்படுத்த முயற்சிப்பவர், தன் செயலுக்காக வருந்துவர். வீட்டிற்கு வரும் உறவினரை உபசரிப்பதில், உரிய ஆர்வம் வேண்டும். புத்திரரின் அறிவுத்திறன் வளர, உங்கள் அனுபவங்களை எளிய நடையில் சொல்வீர்கள். எதிரியிடம் விலகுவதால், எதிரி மனதிலும் உங்கள் மீது நல்ல எண்ணம் ஏற்படும். இல்லறத்துணை கருத்து ஒற்றுமையுடன், குடும்ப நலனில் அக்கறை கொள்வார். தொழில், வியாபாரத்தில் இலக்கு நிறைவேற, கால அவகாசம் தேவைப்படும். பணியாளர், பணியிடத்தில் பொறுமை குணத்துடன் செயல்படுவர். பெண்கள், சேமிப்பு பணத்தில் குடும்பத்தின் சிறுதேவைகளை பூர்த்தி செய்வர். மாணவர்கள், பாதுகாப்பு குறைவான இடங்களில் செல்லக்கூடாது.

பரிகாரம்: துர்க்கை அம்மனை வழிபடுவதுடன், சர்க்கரை பொங்கல் பிரசாதமாக வழங்குவதால், துன்பம் விலகி இன்பம் பெருகும்.

Leave a Reply