shadow

images

உற்சாகத்துடன் பணியாற்றும் மேஷ ராசி அன்பர்களே!

சுக்கிரன், குரு, ராகு, புதன் ஆகியோர் நற்பலன் தருவர். உறவினர் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். குடும்பத்தில் சுபவிஷயம் குறித்த பேச்சு நடக்கும். வீடு, வாகனத்தில் மராமத்துச் செலவு செய்வீர்கள். பிள்ளைகள் உங்களின் சொல்லுக்கு கட்டுப்படுவர். ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்துடன் விருந்து, விழாவில் அடிக்கடி பங்கேற்பீர்கள். மனைவியின் அன்பைக் கண்டு மனம் நெகிழ்வீர்கள். தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும், லாபமும் அதிகரிக்கும். பணியாளர்கள், எதிர்பார்த்த சலுகை கிடைக்கப் பெறுவர். பெண்கள், குடும்ப நலனுக்காகப் பாடுபடுவர். மாணவர்கள், படிப்பில் சிறந்து விளங்குவர்.

பரிகாரம்:
சிவன் வழிபாட்டால் நன்மை உண்டாகும்.

இனிய பேச்சால் பிறரைக் கவரும் ரிஷப ராசி அன்பர்களே!

செவ்வாய், சுக்கிரன் ஆகிய இரு கிரகங்களால் சுக்கிர மங்களயோகம் உண்டாகும். கேது, சனி பகவானின் அமர்வும் நன்மை தரும் விதத்தில் உள்ளது. சிந்தனையில் புதுமை பிறக்கும். புதிய முயற்சிகளில் துணிவுடன் ஈடுபடுவீர்கள். சகோதரர்களின் பாசம் கண்டு நெகிழ்வீர்கள். வாகன பயணத்தில் மிதவேகம் பின்பற்றவும். பிள்ளைகளின் செயல்பாட்டைக் கண்டிப்பதில் பொறுமை தேவைப்படும். ஆரோக்கியம் மேம்படும். மனைவியின் நற்செயல் குடும்பத்திற்கு பெருமை தேடித் தரும். தொழில், வியாபாரத்தில் இடையூறு விலகி நல்ல முன்னேற்றம் உண்டாகும். பணியாளர்கள், எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப் பெறுவர். பெண்கள், மனம் போல விரும்பிய பொருள் வாங்குவர். மாணவர்களுக்கு, நண்பர் விஷயத்தில் கவனம் தேவை.

பரிகாரம்:
விஷ்ணு வழிபாடு சுபயோகம் தரும்.

பொதுநலனில் அக்கறையுள்ள மிதுன ராசி அன்பர்களே!

சுக்கிரன், சூரியன், புதன் மூவராலும் அளப்பரிய நன்மை உண்டாகும். பேச்சில் வசீகரம் நிறைந்திருக்கும். புதியவர்களின் அறிமுகத்தால் உதவி கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும், மகிழ்ச்சியும் வளரும். பிள்ளைகளின் வளர்ச்சி கண்டு பெருமிதம் கொள்வீர்கள். எதிரியின் கெடு செயல் பலமிழந்து போகும். மனைவியின் விருப்பம் அறிந்து நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் புதிய முயற்சியில் ஈடுபட்டு லாபம் காண்பீர்கள். பணியாளர்களுக்கு விண்ணப்பித்த கடனுதவி கிடைக்க வாய்ப்புண்டு. பெண்கள், மகிழ்ச்சிகரமான வாழ்வு நடத்துவர். மாணவர்கள், படிப்பில் சிறந்து விளங்குவர்.

பரிகாரம்: சூரியனை வழிபடுவதால் ஆரோக்கியம் பெருகும்.

உலக நடப்பில் ஆர்வம்மிக்க கடக ராசி அன்பர்களே!

சுக்கிரன், ராகு, குரு மூவராலும் நன்மை உண்டாகும். அவமதித்து பேசுபவரிடம் விலகுவது நல்லது. குடும்பச் செலவுக்கு தேவையான பணம் கிடைக்கும். வாகனத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்வீர்கள். பிள்ளைகளின் எதிர்கால வளர்ச்சி குறித்து ஆலோசிப்பீர்கள். சொத்து பிரச்னைக்கு பேச்சின் மூலம் சுமுகத் தீர்வு கிடைக்கும். மனைவி வழி உறவினர்களுடன் நெருக்கம் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் உழைப்புக்கேற்ற வருமானம் கிடைக்கும். பணியாளர், புதிய நுட்பங்களை ஆர்வமுடன் அறிந்து கொள்வர். பெண்கள், குடும்பச் செலவை தாராள அளவில் நிறைவேற்றுவர். மாணவர்கள், பயனுள்ள பொழுதுபோக்கில் ஈடுபடுவர்.

சந்திராஷ்டமம்: 30.8.15 காலை 6:00 மணி முதல் 31.8.15 காலை 8:00 மணி வரை.

பரிகாரம்: துர்க்கையம்மன் வழிபாடு சகல வளமும் தரும்.

லட்சியத்தில் உறுதி கொண்ட சிம்ம ராசி அன்பர்களே!

சுக்கிரன், சனி ஆகியோர் நற்பலன் தருவர். மனதில் துணிச்சல் பிறக்கும். கடந்த கால உழைப்புக்கான பலனை தற்போது அனுபவிப்பீர்கள். வீடு வாகன வகையில் மராமத்து செலவு அதிகரிக்கும். பிள்ளைகள் படிப்பு, வேலை வாய்ப்பில் முன்னேற்றம் காண்பர். குடும்பத்துடன் அடிக்கடி விருந்து, விழாவில் பங்கேற்பீர்கள். தொழில், வியாபாரத்தில் முதலீட்டை அதிகப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். பணியாளர்களுக்கு, நிர்வாகத்தினரின் பாராட்டும், சன்மானமும் கிடைக்கும். பெண்கள், பிறருக்காக பணப் பொறுப்பு ஏற்க வேண்டாம். மாணவர்கள், திட்டமிட்டுப் படித்து படிப்பில் முன்னேற்றம் காண்பர்.

சந்திராஷ்டமம்: 31.8.15 காலை 8:01 மணி முதல் 2.9.15 காலை 10:22 மணி வரை.

பரிகாரம்: பைரவர் வழிபாடு தொழிலில் வளர்ச்சி தரும்.

பாச பந்தமுடன் பழகி மகிழும் கன்னி ராசி அன்பர்களே!

சுக்கிரன், செவ்வாய் இருவரும் சுக்கிர மங்களயோகம் தரும் விதத்தில் ஆதாய ஸ்தானத்தில் உள்ளனர். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த நல்ல யோகம் கை கூடி வரும். புதியவர்களிடம் நெருக்கமாகப் பழக வேண்டாம். சகோதரர்களின் பாசம் கண்டு நெகிழ்வீர்கள். அலைச்சலால் உடல் அசதிக்கு ஆளாக நேரிடும். பிள்ளைகள் திறமையுடன் செயல்பட்டு பெருமை தேடித் தருவர். மனைவியின் ஆலோசனை வளர்ச்சிக்கு துணை நிற்கும். தொழில், வியாபாரத்தில் மந்தநிலை மாறி வளர்ச்சி கூடும். லாபம் உயரும். பணியாளர்கள், பணிச்சுமையில் இருந்து விடுபடுவர். பெண்கள், உறவினர்களுடன் சுற்றுலா செல்வர். மாணவர்கள், ஆசிரியரின் வழிகாட்டுதலை ஏற்று நடப்பர்.

சந்திராஷ்டமம்: 2.9.15 காலை 10:23 மணி முதல் 4.9.15 மதியம் 1:04 மணி வரை.

பரிகாரம்:
தட்சிணாமூர்த்தி வழிபாடு மனத் தெளிவைத் தரும்.

நல்ல மனதுடன் செயலாற்றும் துலாம் ராசி அன்பர்களே!

கேது, குரு, சூரியன் வியத்தகு நற்பலன் தருவர். எதிரி தொல்லை மறையும். புதிய முயற்சியில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். பூர்வீக சொத்து மூலம் வருமானம் அதிகரிக்கும். உறவினர் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வீர்கள். வெளியூர் பயணத்தின் மூலம் இனிய அனுபவம் காண்பீர்கள். பிள்ளைகளின் தேவையை ஓரளவு நிறைவேற்றுவீர்கள். உடல் நலனில் அக்கறை கொள்வது நல்லது. மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புண்டு. தொழில், வியாபாரத்தில் போட்டி குறையும். வருமானம் உயரும். பணியாளர்களுக்கு, எதிர்பார்த்த பணிமாற்றம் கிடைக்கும். பெண்கள், தாய்வீட்டு உதவியைக் கேட்டுப் பெறுவர். மாணவர்கள், படிப்பிற்காக கூடுதல் நேரம் ஒதுக்குவர்.

சந்திராஷ்டமம்: 4.9.15 மதியம் 1:05 மணி முதல் 5.9.2015 இரவு 12.00 மணி வரை.

பரிகாரம்: லட்சுமி வழிபாடு செல்வ வளம் தரும்.

பிறரை மதிப்புடன் நடத்தும் விருச்சிக ராசி அன்பர்களே!

சுக்கிரன், சூரியன், புதன், ராகு அளப்பரிய நன்மை தருவர். சமூக மதிப்பு உயரும். புதிய முயற்சியில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். பொதுப்பணியில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். வீடு, வாகனத்தில் பாதுகாப்பு நடைமுறையைப் பின்பற்றவும். பிள்ளைகளின் எதிர்கால நலனில் அக்கறை கொள்வீர்கள். ஆரோக்கியம் பலம் பெறும். வழக்கில் சுமுகத்தீர்வு கிடைக்கும். மனைவியிடம் இருந்த கருத்து வேறுபாடு மறையும். தொழில், வியாபாரத்தில் வருமானம் பன்மடங்கு அதிகரிக்கும். பணியாளர்கள், குறித்த காலத்தில் பணியிலக்கை நிறைவேற்றுவர். பெண்கள், உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சியில் பங்கேற்று மகிழ்வர். மாணவர்கள், ஆர்வமுடன் படித்து முதல்நிலை வகிப்பர்.

பரிகாரம்:
ஆஞ்சநேயர் வழிபாட்டால் நன்மை மேலோங்கும்.

சூழ்நிலை உணர்ந்து செயலாற்றும் தனுசு ராசி அன்பர்களே!

சுக்கிரன், குரு, புதன், சனி கிரகங்களால் நன்மை அதிகரிக்கும். குடும்ப கருத்துவேறுபாடு நீங்கி ஒற்றுமை சிறக்கும். உறவினர் வருகையால் வீட்டில் கலகலப்பு உண்டாகும். சாதுர்யமாகப் பேசி தேவைகளை நிறைவேற்றுவீர்கள். புத்திரரின் செயல்பாட்டை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள். மனைவியின் ஆலோசனையால் முன்னேற்றம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆதரவு கிடைக்கும். ஆதாயம் உயரும். பணியாளர்கள், எதிர்பார்த்த சம்பள உயர்வு கிடைக்கப் பெறுவர். பெண்கள், மனம் போல ஆடை, அணிகலன் வாங்குவர். மாணவர்கள், படிப்பில் முன்னேற்றம் காண்பர்.

பரிகாரம்: நரசிம்மர் வழிபாடு நன்மையளிக்கும்.

உதவியைப் பெரிதென மதிக்கும் மகர ராசி அன்பர்களே!

கேது, சந்திரன் இருவராலும் நன்மை உண்டாகும். எதிர்காலம் குறித்த சிந்தனை மேலோங்கும். நண்பர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். வீடு, வாகனத்தில் அறிமுகம் இல்லாதவருக்கு இடம் தர வேண்டாம். புத்திரரின் நற்செயல் கண்டு பெருமை கொள்வீர்கள். எதிரிகள் இருந்த இடம் தெரியாமல் பறந்தோடுவர். மனைவியின் உடல் நலனுக்காக மருத்துவச் செலவு செய்ய நேரிடும். தொழில், வியாபாரத்தில் மந்தநிலை மாறி முன்னேற்றம் உண்டாகும். பணியாளர், சகபணியாளர்களுடன் நட்புணர்வுடன் பழகுவர். பெண்கள், பிள்ளைகளின் நலனுக்காக பாடுபடுவர். மாணவர்கள், திட்டமிட்டுப் படித்து சிறப்பர்.

பரிகாரம்:
ஐயப்பன் வழிபாட்டால் தன்னம்பிக்கை வளரும்.

வரவுக்கு ஏற்ப செலவு செய்யும் கும்ப ராசி அன்பர்களே!

செவ்வாய், குரு, புதன் மூவரும் நன்மை வழங்குவர். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். புதிய முயற்சி வெற்றி பெறும். உடன்பிறந்தவர்களின் உதவி கிடைக்கும். வெளியூர் பயணத்தில் திடீர் மாறுதல் உண்டாகும். புத்திரர், படிப்பு, வேலையில் முன்னேற்றம் காண்பர். எதிரிகளின் கெடு செயலை சமயோசிதத்தால் சரி செய்வீர்கள். மனைவியின் விருப்பம் அறிந்து நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் மிதமான லாபம் கிடைக்கும். பணியாளர்கள், பணிவிஷயமாக வெளியூர் செல்வர். பெண்கள், குடும்ப நலனில் அக்கறை கொள்வர். மாணவர்கள், நண்பர்களுடன் சேர்ந்து படிப்பர்.

பரிகாரம்:
விநாயகர் வழிபாட்டால் நன்மை சேரும்.

புதுமையில் விருப்பம் கொண்ட மீன ராசி அன்பர்களே!

சுக்கிரன், சூரியனால் நன்மை உண்டாகும். நண்பர் உதவிகரமாக செயல்படுவர். திட்டமிட்டு செயல்பட்டு இலக்கை எளிதில் அடைவீர்கள். பூர்வீகச் சொத்தில் வருமானம் கிடைக்கும். திருமணப் பேச்சில் முன்னேற்றம் ஏற்படும். தாயின் கருத்துக்கு மதிப்பளித்து நடப்பீர்கள். பிள்ளைகளுடன் கருத்துவேறுபாடு ஏற்படலாம். ஆரோக்கியம் பலம் பெறும். மனைவியின் செயல்பாடு குடும்ப ஒற்றுமைக்கு வழிவகுக்கும். தொழில், வியாபாரத்தில் மிதமான லாபம் கிடைக்கும். பணியாளர்கள், சுறுசுறுப்புடன் செயலாற்றி நற்பெயர் காண்பர். பெண்கள், பணம், நகை இரவல் கொடுப்பது கூடாது. மாணவர்கள், படிப்பு தவிர பிற விஷயத்தில் ஈடுபட வேண்டாம்.

பரிகாரம்:
சரஸ்வதி வழிபாடு வளர்ச்சி அளிக்கும்.

Leave a Reply