shadow

ம.தி.மு.க.வை உடைக்க நினைத்திருந்தால் எப்போதோ உடைத்திருப்போம்: மு.க.ஸ்டாலின்
mdmk
மதிமுகவின் முக்கிய தலைவர்கள் ஒவ்வொருவராக அந்த கட்சியில் இருந்து விலகி திமுக மற்றும் பிறகட்சிகளுக்கு சென்று வருகின்றனர். இன்னும் பல மதிமுகவில் இருந்து வெளியேற காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தனது கட்சியை உடைக்க ரூ.200 கோடியில் திமுக புரொஜக்ட் ஒன்றை செய்து வருவதாக வைகோ குற்றம் சாட்டியுள்ளார். திமுகவுடன் கூட்டணி இல்லை என சமீபத்தில் வைகோ அறிவித்ததால்தான் திமுக தலைமை மதிமுக தலைவர்களை இழுத்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மதிமுகவை உடைக்க வேண்டிய அவசியம் தங்களுக்கு இல்லை என்றும் அந்த கட்சியை உடைக்க வேண்டும் என்று நாங்கள் நினைத்திருந்தால் எப்பவோ உடைத்திருப்போம் என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தை சேர்ந்த ம.தி.மு.க.வை சேர்ந்த 160 தொண்டர்கள் நேற்று மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில், தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தங்களை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர்.

அந்த இணைப்பு விழாவில் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ”தி.மு.க. தொண்டர்கள் மட்டுமன்றி, பொதுமக்கள் மத்தியிலும் ஒரு ஆட்சி மாற்றம் வேண்டும் என்றும், அதுவும், தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் மாற்றம் வேண்டும் என்ற எண்ணம் வந்துள்ளது. அண்மையில் தொடர்ந்து சில நாட்களாக பத்திரிகைகளில், ம.தி.மு.க.வில் இருந்து தாய் கழகமான தி.மு.க.விற்கு வந்து சேர்கிறார்கள் என செய்திகள் வந்துள்ளன.

நாங்கள் அந்த கட்சியை உடைக்கும் முயற்சியில் இருப்பதாக கூறுகிறார்கள். நாங்கள் உடைக்க வேண்டும் என்று நினைத்தால் எப்போதோ உடைத்திருப்போம். ஆனால், அவர்கள் தானாக விரும்பி நிம்மதியை தேடி இங்கு வருகிறார்கள். இன்று, நீங்கள் மட்டுமின்றி நாங்களும் முழு நிம்மதியை பெற்றுள்ளோம். தி.மு.க. இன்று ஆட்சியிலோ, எதிர் கட்சியாகவோ இல்லாத நிலையிலும், கருணாநிதியை நம்பி பிற கட்சிகளை சேர்ந்த நீங்கள் எல்லாம் வந்துள்ளீர்கள்.

ஏப்ரல் மாதம் 2016 சட்டமன்ற தேர்தலில் நமது உணர்வை வெளிப்படுத்த வேண்டும். மக்களிடம் இந்த உணர்வை பெறுவதற்கான பொறுப்பை நீங்கள் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் தான் உங்கள் உற்றார், உறவினர்கள் மற்றும் உங்களை சுற்றி உள்ளவர்களிடம் பிரசார பீரங்கிகளாக மாறி தி.மு.க.வுக்காக பிரசாரம் செய்ய வேண்டும்”

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்

Leave a Reply