shadow

10இயற்கையின் கொடையாக, கோடை காலத்தில் மட்டுமே சில பழங்கள் கிடைக்கின்றன. அவற்றுள், கோடை வந்ததுமே சாலையோரத்தை நிறைக்கும், நீர் நிறைந்த தர்பூசணிப் பழத்தை விரும்பாதவர் இருக்க முடியுமா?

தர்பூசணிப் பழத்தின் சிறப்புகள் பற்றி, மதுரை மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியின் ஹோம் சயின்ஸ் துறை, பேராசிரியர் சாந்தி அவர்கள் கூறும் கருத்துக்களை பார்ப்போம்.

‘வெயில் காலத்துக்கு ஏற்ற பழம் மட்டுமல்ல… புத்துணர்ச்சியைத் தரும் பழமும் தர்பூசணிதான். தாகத்தைத் தணிக்கும் நல்ல நீராகாரம். இதில், வைட்டமின்கள், தாதுக்கள், கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து போன்றவை நிறைவாக உள்ளன. தர்பூசணி சாப்பிடுவதால் உடலின் வெப்பநிலை குறைவதுடன், உயர் ரத்த அழுத்தமும் கட்டுப்படுகிறது. இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் கட்டி, ஆஸ்துமா, வீக்கம், சர்க்கரை நோய், பெருங்குடல் புற்றுநோய் மற்றும் கீல்வாதம் போன்றவற்றையும் வராமல் தடுக்கிறது.

தர்பூசணியைக் கடித்தும் சாப்பிடலாம், பழச் சாறாகவும் அருந்தலாம். சாறு எடுத்து உண்ணும்போது கல்லடைப்பு நீங்கும். சர்க்கரை வியாதியும் கட்டுப்படும். இதய நோய்கள் மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களுடன் போராடி வெற்றிபெறும் தன்மைகொண்டது. இதில், பொட்டாசியம் நிறைவாக உள்ளதால், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். தர்பூசணி பழத்தின் விதையிலும் அதிக ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன.

தர்பூசணியில் இருக்கும் சிட்ரூலின் (Citrulline) என்ற சத்துப் பொருள், கொழுப்புச் சேர்வதை தடுக்கிறது. ரத்தத்தில் இந்த சிட்ரூலின் கலந்ததும், சிறுநீரகத்தின் உதவியுடன் ‘அர்ஜனைன்’ (Arginine) என்ற வேதிப்பொருளாக மாற்றப்படுகிறது. இந்த அர்ஜனைன், கொழுப்பு செல்களைக் கட்டுப்படுத்தி, கொழுப்பு அதிக அளவில் உற்பத்தியாவதைத் தடுக்கிறது. இதுதவிர காயம், புண் உள்ள பகுதியில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. காயம்பட்ட பகுதியில் நல்ல ரத்த ஓட்டம் காரணமாக ஆக்சிஜன் அளவு அதிகரித்து, புண் விரைவில் குணமாக உதவுகிறது. புண் உள்ள பகுதியில் புதிய திசுக்கள் உற்பத்திக்கும் அர்ஜனைன் காரணமாகிறது.

தர்ப்பூசணியில், ‘ஃபைட்டோ நியூட்ரியன்ட்ஸ்’ என்ற சத்து உள்ளது. இது, உடலை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கிறது. இதில் உள்ள மூலப்பொருள்கள் ரத்தம் வழியாகச் சென்று, நரம்புகளுக்குக் கூடுதல் சக்தியைத் தருகிறது. தினமும் தர்பூசணி சாப்பிடுவதன் மூலம் நம்முடைய ஆற்றல் அளவை 23 சதவிகிதம் அளவுக்கு உயர்த்த முடியும். இதில், மகிழ்ச்சிக்கான ‘டோபோமைன்’ என்ற ரசாயனம் சுரக்க உதவும், வைட்டமின் பி6 அதிகமாக உள்ளது. இப் பழத்தில் உள்ள வைட்டமின் சி, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது.

எல்லோருக்கும் நீர்ச்சத்து மிகவும் முக்கியம் என்பதால், தர்பூசணியை எந்த வயதினரும் சாப்பிடலாம். இந்தப் பழம் உடலில் உள்ள நீரின் அளவினை சமநிலையில் வைத்துக் கொள்ள உதவும்.

தர்பூசணி ஜூஸ்

4 பெரிய தர்பூசணித் துண்டுகளைப் பொடியாக நறுக்கி, மிக்ஸியில் போட்டு, அதில் சிறிது தேன், ஒரு சிட்டிகை மிளகுத் தூள், கால் டீஸ்பூன் சுக்குத் தூள், அரை சிட்டிகை உப்பு சேர்த்து அரைக்கவும். பிறகு வடிகட்டி, 4 ஐஸ் கட்டிகள் சேர்த்து அருந்தலாம்.

தர்பூசணிப் பழத்தை மிக்ஸியில் அரைத்து, சிறிது எலுமிச்சம் பழச் சாறு சேர்த்துக் குடிக்கலாம் அல்லது காய்ச்சி, குளிரவைத்த பாலைச் சேர்த்தும் அருந்தலாம்.

Leave a Reply