shadow

vishaalநடிகர் சங்கத்தில் விஷால் மற்றும் சரத்குமாருக்கும் இடையேயான மோதல் நாளுக்கு நாள் முற்றிக்கொண்டே வருகிறது. இருதரப்பினர்களையும் சமாதானப்படுத்த ஒருசிலர் முயற்சிகள் எடுத்தும் அது நிறைவேறவில்லை. விரைவில் வரவிருக்கும் நடிகர் சங்கத்தேர்தலில் சரத்குமாருக்கு எதிராக இளம் நடிகர்களின் துணையோடு விஷால் களமிறங்குவார் என்று கூறப்பட்டு வரும் நிலையில் சமீபத்தில் விஷால் சரத்குமாரிடம் மூன்று கேள்விகள் கேட்டுள்ளார். அவை

ஒன்று : நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்டுவது தொடர்பாக…

இதைப்பற்றிக் கேட்கும் போது இது சம்பந்தமாக வழக்கு தொடரப்பட்டுள்ளது என்பதை காரணம் காட்டுகிறார்கள். ‘பூச்சி’ முருகன் தொடர்ந்த வழக்கை வாபஸ் வாங்கினால் கட்டிடம் கட்டலாம் என்று சொல்லப்பட்டது. இந்த வழக்கில் கட்டிடம் கட்டுவது தொடர்பான ‘டீல்’ செல்லாது என்று நீதிபதி சந்துரு ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளார்.

9 பேருக்கு பதிலாக 2 பேர் கையெழுத்திட்டால் அந்த ‘டீல்’ செல்லாது என்று அந்த சிங்கிள் பெஞ்ச் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்பின் டிவிஷன் பெஞ்ச் நீதிமன்றமும் இது செல்லாது என்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புகள் தவறா..?

இரண்டு : கடந்த வருடம் நடந்த சிறப்பு செயற்குழு கூட்டத்தில் 2015 பொங்கலுக்குள் வழக்கை உடைத்து கட்டிடம் கட்டாவிட்டால் விஷால் சொல்லும் திட்டத்தை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்று சொன்னார்கள். பொங்கல் முடிந்து மாதங்கள் பல மாதங்கள் ஆகி விட்டன. இன்னும் அதற்கு சரியான விளக்கம் கிடைக்கவில்லை.

மூன்று : திரு. குமரிமுத்து அவர்கள் ‘திருவாளர்’ என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்காகவே பைலா எண் 13-ன்படி நடவடிக்கை எடுத்து அவரை சங்கத்திலிருந்து நீக்கினார்கள். ஆனால் என்னை ‘நாய்’ என்று பேசி இழிவுபடுத்தியவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே…? அப்படியானால் பைலா எண் 13-ன் கீழ் நடவடிக்கை என்பது குமரிமுத்துவுக்கு மட்டும் தானா..? ஏன் துணைத்தலைவர் காளைக்கு அந்த சட்டம் பொருந்தாதா…? இதற்கு மனசாட்சிப்படி அவர்கள் விளக்கம் சொல்லட்டும்.

இந்த மூன்று கேள்விகளில் உள்ள நியாயமான கருத்துகளை சொல்வது சங்கத்தின் மீது அவதூறான செய்திகளை பரப்பி வருவதாக ஆகி விடுமா..? இதற்கும் அவர்கள் மன்சாட்சி சரியான பதிலை சொல்லட்டும். இவ்வாறு விஷால் கேட்கிறார்.

மேலும் இந்த மோதல் குறித்து விஷால் செய்தியாளர்களிடம் கூறியபோது, “நான் யாருடனும் மோதவோ அல்லது குழப்பத்தை விளைவிக்கவோ விரும்பவில்லை. நான் நடிகர் சங்கத்தில் ஒரு சாதாரண உறுப்பினர் என்ற முறையில் அதன் செயல்பாடுகளில் அதிக அக்கறை உள்ளவன். மேலே உள்ள எனது மூன்று கேள்விகளுக்கு தெளிவான விளக்கம் தேவை. இதைத்தான் நான் காலங்காலமாக கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஆனால் சரியான விளக்கம் இதுவரை வந்தபாடில்லை’ என்று கூறியுள்ளார்.

Leave a Reply