shadow

img-20151225-wa0001

கல்யாணமாகி இரண்டே மாதங்கள் ஆன அந்த இளம் தம்பதிக்கு ஒரு பேரிடி விழுந்தது! ஆம். கணவனுக்கு தலைக்குள் கட்டி. பல டாக்டர்களிடம் காட்டி எல்லாவித டெஸ்டும் பண்ணியாகிவிட்டது.

“ஸ்கல்லை ஓபன் பண்ணி, ஆபரேஷன் பண்ணி கட்டியை எடுத்துடலாம். ரொம்ப ஈஸி!…” டாக்டர்கள் ரொம்ப ஈஸியாக சொல்லிவிட்டனர். அந்த பையனின் மனைவிக்கோ வயிற்றை கலக்கியது. ஆபத்பாந்தவன், அனாதரக்ஷகனை நாடி ஓடி வந்தனர். சாதாரணமாக கல்யாணமாகி “Honey Moon ” என்று தேன்நிலவு போகவேண்டியவர்கள் தேனம்பாக்கத்துக்கு வந்தார்கள். பெரியவாளுடைய திருவடிகளில் நமஸ்காரம் பண்ணிவிட்டு எழுந்தபோது அந்த பெண் அடக்கமாட்டாமல் அழுதாள். அவள் அழுது ஓயும் வரை பெரியவா மெளனமாக அவர்கள் இருவரையும் பார்த்துக்கொண்டிருந்தார்.

“இவருக்கு தலைக்குள்ள tumour ன்னு சொல்லிட்டா பெரியவா….. ரொம்ப பயமா இருக்கு பெரியவா….கல்யாணமாய 07; ரெண்டு மாசம் ஆறது. பெரியவா என்ன சொன்னாலும் கேக்கறேன்….காப்பாத்துங்கோ பெரியவா!”….குழந்தை அழுவதை தாயார் சஹிப்பாளா?

“ஆபரேஷன்ல எனக்கு நம்பிக்கை இல்லே……அதுவும், தலேல ஆபரேஷன் நேக்கு சரியா படலே…” மௌனமானார்.

தம்பதிகளும் சுற்றி நின்றவர்களும் இந்த மௌன இடைவெளிக்குப் பின் என்ன உத்தரவு வருமோ என்று காது, கண் எல்லாவற்றையும் கூராக்கிக் கொண்டனர். தெய்வம் அந்தப் பையனைப் பார்த்து திருவாய் மலர்ந்தது.

“நீ என்ன பண்றே….காவேரிக் கரையோரமா இருக்கற எதாவுது ஒரு
க்ஷேத்ரத்துக்கு போ! ஸ்வாமி தர்சனம் பண்ணு! தெனோமும் விடிகாலம்பற காவேரிக் கரையோட களிமண்ணை தலைல முழுக்க அப்பிண்டு அரை மணி உக்காரு. அப்புறம், ஸ்நானம், ஸந்த்யாவந்தனம், ஸ்வாமி தர்சனம், எல்லாம் பண்ணு. நல்ல
ஆசாரமான எடத்ல தங்கணும். ஸ்வயம்பாகம் பண்ணி சாப்டணும்…… இப்டீயா ஒரு மண்டலம், நாப்பது நா…இருந்தா, எல்லாம் செரியாயிடும்…”

தம்பதிக்கு சந்தோஷம் எல்லை தாண்டி போனது! நமஸ்காரம் பண்ணிவிட்டு ப்ரஸாதம் பெற்றுக்கொண்டு நேராக, திருச்சி அருகே காவேரிக் கரையில் ஒரு க்ஷேத்ரத்தில் தங்கினார்கள். பெரியவா சொன்னபடியே ப்ராத காலத்தில் களிமண் காப்பு, ஸ்நானம், ஸந்த்யா வந்தனம், ஸ்வாமி தர்சனம், ஸ்வயம்பாகம் எல்லாம் அழகாக நாற்பது நாள் பண்ணினார்கள்.

ஊருக்கு வந்ததும், டாக்டரிடம் போனதும், அவர் செக் பண்ணிவிட்டு,
“ஒண்ணுமேயில்லியே ! கட்டி கம்ப்ளீட்டா கரைஞ்சு போய்டுத்து” என்று சொல்லி அனுப்பிவிட்டார்.

உடனேயே இருவரும் ஓடி வந்தனர் பெரியவாளிடம். ஒண்ணரை மாசத்துக்கு முன் துக்கம் தாங்காமல் கண்ணீர் விட்டவள், இப்போது ஆனந்தம் தாங்காமல் கண்ணீர் விட்டாள். நன்றி பெருக்கால் வார்த்தைகளே வரவில்லை. “பெரியவா….இல்லேன்னா
எங்களுக்கு யார் இருக்கா?”

“நா….என்ன பெருஸ்…ஸா பண்ணிட்டேன்? “வைத்யோ நாராயணோ ஹரி” தெரியுமோன்னோ? நேக்கு ஒண்ணும் தெரியாது” என்று அமைதியாக சொன்னார்

Leave a Reply