shadow

கடமையை செய்த பெண் போலீஸ் அதிகாரி இடமாற்றம்: உபியில் பரபரப்பு

தமிழகத்தில் மதுக்கடைக்கு எதிராகப் போராடிய பெண்ணின் கன்னத்தில் அறைந்த ஓர் உயர் போலீஸ் அதிகாரிக்கு பதவி உயர்வு அளித்தது போல் உபி மாநிலத்தில் கடமையை சரியாக செய்த ஒரு பெண் போலீஸ் அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள புலந்த் சாகர் மாவட்டத்தில், சயன்னா பகுதியைச் சேர்ந்தவர் சிரேஷ்ட தாகூர் என்ற பெண் போலீஸ் அதிகாரி உரிய ஆவணங்கள் இன்றி வாகனத்தில் வந்த பி.ஜே.பி பிரமுகர் ஒருவருக்கு அபராதம் விதித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பிரமுகர் பெண் போலீஸ் அதிகாரியை திட்டியுள்ளார். இதனால் அவரை கைது செய்தார் சிரேஷ்ட தாகூர்

இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் உபி மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு, மாநிலம் முழுவதும் 234 அதிகாரிகளை இடமாற்றம்செய்துள்ளது. அதில், சிரேஷ்ட தாகூரும் ஒருவர். இதுகுறித்து கருத்து கூறிய சிரேஷ்ட தாகூர், “இது வழக்கமான இடமாற்றமா அல்லது அரசியல் சம்பந்தப்பட்டதா என்பதுகுறித்து என்னால் பதில் சொல்ல முடியாது. ஆனால், என்னுடைய பேட்ஜைச் சார்ந்த யாரும் இடமாற்றம் செய்யப்படவில்லை. எங்கள் வீட்டிலிருந்து அதிக தொலைவான இடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளேன். இருந்தாலும், இது என் தொழில் என்பதால் ஏற்றுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Leave a Reply