shadow

unஐ.நா. தலைமையகத்தில் பாலஸ்தீனம் உள்பட பார்வையாளராக உள்ள நாடுகளின் கொடிகளை பறக்க அனுமதிக்கும் தீர்மானம் ஐ.நா. பொது சபையில் நிறைவேறியது. இந்த தீர்மானத்துக்கு இந்தியா உள்பட 119 நாடுகள் ஆதரவாக வாக்களித்தது. பாலஸ்தீனம் தவிர வாடிகன் நாட்டின் கொடியும் ஐ.நா.வில் பறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா.வில் உறுப்பினர் அல்லாத பார்வையாளராக உள்ள நாடுகளின் கொடிகளை நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் பறக்கவிடுவது தொடர்பான தீர்மானம் நேற்று முன்தினம் கொண்டு வரப்பட்டது.

இதில் இந்தியா உள்ளிட்ட 119 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. 8 நாடுகள் எதிராக வாக்களித்தன. 45 நாடுகள் வாக்களிப்பை புறக்கணித்தன.

இஸ்ரேல், ஆஸ்திரேலியா, மார்ஷல் தீவுகள், கனடா, அமெரிக்கா, பலாயு, டுவாலு, மைக்ரோனேசியா ஆகியவை எதிராக வாக்களித்தன.

தீர்மானம் பெரும்பான்மையான உறுப்பு நாடுகளின் ஆதரவுடன் நிறைவேறியதன் மூலம் பாலஸ்தீன கொடி ஐ.நா.வில் பறக்க அங்கீகாரம் கிடைத்துள்ளது. இது தொடர்பாக மகிழ்ச்சி தெரிவித்த ஐநாவுக்கான பாலஸ்தீன தூதர் ரியாத் மன்சூர், இது வரலாற்றுச் சிறப்புமிக்க வாக்கெடுப்பு. பாலஸ்தீன மக்களின் போராட்டத்துக்கு கிடைத்துள்ள வெற்றி என்றார்.

2012-ம் ஆண்டு ஐ.நா.வில் பார்வையாளர் நாடாக பாலஸ்தீனம் அங்கீகரிக்கப்பட்டது. 1964 முதல் உறுப்பினர் அல்லாத பார்வையாளர் நாடாக வாடிகன் உள்ளது

Leave a Reply