shadow

two moonsஇன்று வானத்தில் இரண்டு நிலாக்கள் தோன்றும் என்று இணையதளங்களில் வெளிவந்துள்ள செய்தி தவறானது என்றும், பொதுமக்கள் அதை நம்ப வேண்டாம் என்றும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் அறிவித்துள்ளது

கடந்த இரண்டு நாட்களாக ஒருசில தமிழ் மற்றும் ஆங்கில இணையதளங்களில் இன்று இரவு இரண்டு நிலவுகள் தெரியும் என செய்திகள் வெளியிட்டு வந்தன. அதுமட்டுமின்றி செவ்வாய் கிரகம் இன்று மிக பெரிதாக தெரியும் என்றும் அவை தெரிவித்துள்ளன. இந்த செய்திகள் குறித்து தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மைய செயல் இயக்குனர் பி.அய்யம்பெருமாள் அவர்கள் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது ”வானில் இன்று இரவு 2 நிலா தெரியும் என வலைதளத்தில் வதந்தி பரவி வருகிறது.

இதுதொடர்பாக கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் உதவியுடன் புகைப்படங்களும் வெளிவந்துள்ளன. இவை வெறும் புரளிதான். இதை பொதுமக்கள் நம்ப வேண்டாம். செவ்வாயும், பூமியும் சூரியனை மையமாக வைத்து நீள்வட்ட பாதையில் சுற்றுகின்றன. இவ்வாறு ஒவ்வொரு கிரகங்களும் தன் பாதையில் சுற்றி வரும்போது, அவற்றிற்கு இடையே தொலைவு மாறி மாறி அமையும். பூமிக்கும் செவ்வாய்க்கும் இடையேயான சராசரி தொலைவு 22½ கோடி கிலோ மீட்டர் ஆகும்.

மேலும், கிரகங்கள் சுற்றும் பாதை எப்போதும் ஒரேமாதிரி இருக்காது. நீள்வட்ட பாதையில் உள்ள தடுமாற்றங்கள் காரணமாக ஒவ்வொரு முறையும் அருகாமையில் வரும்போதும் பூமி, செவ்வாய் தொலைவு சற்றே கூடி குறையும். கடந்த 2003 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 27 ஆம் தேதி பூமிக்கும் செவ்வாய்க்கும் உள்ள தொலைவு 5½ கோடி கிலோ மீட்டராக இருந்தது.

இதுதான் கடந்த 6 ஆயிரம் ஆண்டுகளில் மிக குறைவான தொலைவாக இருந்தது. அதுபோல 2 கிரகங்களும் மிக அருகே வரும் நிலை மறுபடியும் 2287 ஆம் ஆண்டில் தான் ஏற்படும். எனினும், இந்த நாட்களிலும் வெறும் கண்களுக்கு ஒளி புள்ளியாகத்தான் செவ்வாய் தென்படும். எனவே அறிவியல் பூர்வமற்ற விஷயங்களை யாரும் நம்ப வேண்டாம்” என்று கூறியுள்ளார்.

Leave a Reply