7 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைய தடை? டிரம்ப் அதிரடி
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் திடீரென மற்றொரு அதிரடியாக 7 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குதை திடீரென நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளார்.
ஈரான், ஈராக், சிரியா, லிபியா, சூடான், ஏமன், சோமாலியா ஆகிய 7 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவது 3 மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் ஏழு நாட்டவர்களும் அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாகவே கருதப்படுகிறது.
இந்த நடவடிக்கை உலகில் உள்ள முஸ்லீம்களுக்கு எதிரானது என்று அமெரிக்க ஊடகங்களில் செய்தி வெளியாகி வருவதால் உலகெங்கிலும் டிரம்புக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்த உத்தரவு குறித்து நேற்று அதிபர் டிரம்ப் விளக்கம் ஒன்றை அளித்தார். அந்த விளக்கத்தில் அவர் கூறியதாவது:
ஒரு விஷயத்தை தெள்ளத்தெளிவாக சொல்லிக் கொள்கிறேன். இந்த தடை நிச்சயமாக முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல. ஊடகங்கள்தான் முஸ்லிம்களுக்கு எதிரான தடை என்று தவறாக தெரிவித்து உள்ளன. இது ஒரு மதம் சார்ந்த பிரச்சினை கிடையாது.
இது பயங்கரவாதத்துக்கு எதிராகவும், அமெரிக்க மக்களின் பாதுகாப்புக்காகவும் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ஆகும். உலகில் 40-க்கும் மேற்பட்ட முஸ்லிம் நாடுகள் உள்ளன. இந்த நாடுகளில் வாழும் பெரும்பான்மையான முஸ்லிம்கள் யாரும் அமெரிக்க அரசின் உத்தரவால் பாதிக்கப்படவில்லை.
எங்களது நாட்டில் பாதுகாப்பு கொள்கைகள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளன என்பதை அடுத்த 90 நாட்களில் ஆய்வு நடத்தி அதை உறுதி செய்து கொண்ட பிறகு எங்களுடைய நிர்வாகம் மீண்டும் விசாக்களை வழங்கும்.
சிரியாவில் மனிதகுலத்துக்கு ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடி குறித்து கவலை கொள்கிறோம். அதே நேரம், நாட்டு மக்களை பாதுகாத்து அவர்களுக்கு சேவை செய்யவேண்டியதுதான் எங்களது அரசின் முதல் கடமை ஆகும். அதே நேரம் அரசின் உத்தரவால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களுக்கு உதவுவதற்கான வழிமுறைகளையும் காண்போம்.
எங்களது நாட்டில் குடியேறி இருக்கும் வெளிநாட்டவர்கள் குறித்து அமெரிக்கா பெருமைகொள்கிறது. அதே நேரம் நெருக்கடியால் வெளியேறியவர்களுக்கு (அகதிகள்) அமெரிக்கா தொடர்ந்து கருணை காட்டும். என்றபோதிலும் எங்களது குடிமக்களையும் எல்லைகளில் வசிப்போரையும் பாதுகாக்க நாங்கள் இதுபோல் செய்துதான் ஆகவேண்டும்.
ஏற்கனவே ஒபாமா அரசாங்கம் குறிப்பிட்ட நாடுகளின் பயங்கரவாதத்தால் அமெரிக்காவுக்கு ஆபத்து உருவாகலாம் என்று 7 நாடுகளை அடையாளம் கண்டு அதை பட்டியல்படுத்தி உள்ளது. அந்த 7 நாடுகளுக்குத்தான் இந்த தடையை பிறப்பித்து இருக்கிறோம்.
இவ்வாறு டிரம்ப் அந்த விளக்க உரையில் தெரிவித்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.