கடந்த வாரம் மலேசிய விமானம் MH17 விபத்துக்குள்ளாகி 298 பேர் பலியான அதிர்ச்சியில் இருந்து இன்னும் மக்கள் மீளமுடியாத நிலையில், நேற்று மீண்டும் ஒரு விமானம் விபத்துக்குள்ளாகி 51 பேர் பலியான செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
நேற்று தைவான் நாட்டில் டிரான்ஸ் ஆசியா என்ற நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று கடும்புயல் காரணமாக பெங்கு கவுன்டி என்ற பகுதியின் மேக்காங் நகரில் உள்ள விமான நிலையத்தில் அவசரமாக தரை இறங்கியபோது விமானத்தின் எஞ்சினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானதாக தைவான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விமான விபத்தில் 51 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும், 7 பேர் படுகாயம் அடைந்ததாகவும், பி.டி.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தைவான் மீட்புப்படையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 42 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் மீதி உடல்களை தேடி வருவதாகவும் மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர். பலியானவர்களின் பெயர்கள் மற்றும் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், இன்னும் சிறிது நேரத்தில் அந்த விவரங்கள் வெளியாகும் என்றும் தைவான் விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.