shadow

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இன்று கடும் வெயில். வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என எச்சரிக்கை

summerசென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று 41டிகிரி செல்ஷியஸ் வரை வெயிலின் தாக்கம் இருக்கும் என்பதால் முக்கிய அலுவல் இல்லாத பட்சத்தில் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி எச்சரித்துள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் இதர பகுதிகளில் அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது. மேலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வெப்பநிலை அதிகபட்சமாக 41 டிகிரி செல்சியஸ் வரை உயரக் கூடும் என்றும், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் வெப்ப அலையின் தாக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வுத் துறை (India Meteorological Department)  அறிவித்துள்ளது. மேலும் இதுவரை இந்தியா முழுவதும் வெயிலின் வெப்பத்தால் சுமார் 70 பேர் பலியாகி உள்ளனர் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இதுகுறித்து  காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி கூறியதாவது, “எனவே, அடுத்த 48 மணி நேரத்திற்கு வெப்ப அலையின் தாக்கம் ஏற்படலாம். இது குறித்து கடலோட மாவட்டங்களில் உள்ள ஆட்சியர்கள் வாயிலாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கு வெப்ப அலையின் தாக்கம் ஏற்படலாம் என்பதால், பொதுமக்கள் இது குறித்து அச்சப்பட தேவையில்லை. மேலும், பொதுமக்கள் அவசிய தேவைகளின்றி வெளியில் செல்ல வேண்டாம். குறிப்பாக, நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும்” என்று பொதுமக்களுக்கு அவர் அறிவுறுத்தி உள்ளார். அத்துடன் அவர் சில டிப்ஸ்களையும் பொதுமக்களுக்கு வழங்கி உள்ளார்.

வெப்ப அலையின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களை காத்துக்கொள்ள கலெக்டர் கஜலட்சுமி கூறியுள்ள சில டிப்ஸ்…

 *    வெயில் நேரத்தில் அதிகளவில் களைப்படைய வைக்கும் பணிகளை செய்ய வேண்டாம். தண்ணீர் அதிக அளவு குடிக்க வேண்டும்.
 *    காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.
 *    குழந்தைகள் மற்றும் செல்லப் பிராணிகளை பார்க்கிங் செய்துள்ள வாகனங்களில் விட்டுச் செல்ல வேண்டாம்.
*    தவிர்க்க இயலாத சூழ்நிலைகளில் வெளியே செல்ல நேரும்போது குடிநீர் எடுத்துச் செல்ல வேண்டும்.
*    வெளியில் செல்லும்போது, தலை, கழுத்து மற்றும் கை கால்களை சிறிது ஈரமான துணியினால் மூடி செல்ல வேண்டும். தொப்பி அல்லது குடை எடுத்துச் செல்ல வேண்டும்.
 *    களைப்பாக உணரும் பட்சத்தில் தேவையான அளவு தண்ணீர் பருக வேண்டும்.
 *    டீ, காபி போன்ற பானங்கள் தவிர்ப்பது நலம். அவற்றிற்கு பதிலாக மோர், கஞ்சி மற்றும் பழச்சாறுகள் போன்ற பானங்களை அருந்தலாம்.
 *    வெயிலினால் சோர்வு/உடல் நலக்குறைவு ஏற்படும் பட்சத்தில் அருகிலுள்ள மருத்துவரை அணுகவும்.
 *    கால்நடைகளை நிழலான இடங்களில் தங்க வைப்பதோடு, அவற்றிக்கு தேவையான அளவு தண்ணீரும் வழங்கிட வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் கஜலட்சுமி கூறியுள்ளார்.

Leave a Reply