shadow

நிர்மலாதேவி யாரென்றே எனக்கு தெரியாது: கவர்னர் பன்வாரிலால் பேட்டி

அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி கல்லூரி மாணவிகளை தவறான பாதையில் கொண்டு சென்றதற்காக கைது செய்யப்பட்ட நிலையில் இந்த விவகாரத்தில் கவர்னரும் சம்பந்தப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.

இந்த நிலையில் நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்த தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் இதுகுறித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்ததாவது:

தமிழக கவர்னராக பதவி ஏற்று 6 மாத காலத்தை நிறைவு செய்துள்ளேன். உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சியடைகிறேன். காரணம் நானும் ஒரு பத்திரிகையாளன். தற்போது உள்ள பிரச்சினை பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம். நேற்று பேப்பரில் பார்த்தேன். மாணவர்களை பேராசிரியர் தவறாக வழிநடத்திய சம்பவம் கண்டனத்திற்குரியது.

குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். இதற்காக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அவர் மூத்த அனுபவமுள்ள அலுவலர். தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் ஓய்வுபெற்றவர்.

விசாரணை அதிகாரி சந்தானம் ஒருவாரத்தில் அறிக்கை சமர்ப்பிப்பார். அவர் சமர்ப்பிக்கும் அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். சந்தானம் அனைத்தையும் விசாரிப்பார். அவரது அறிக்கை அடிப்படையில் வேந்தர் என்ற முறையில் நான் நடவடிக்கை எடுப்பேன். விசாரணை ஆணையம் அமைப்பதற்கு ஆளுநருக்கு அதிகாரம் உண்டு. பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் குற்றச்சாட்டு உறுதிசெய்யப்படும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் உண்மை வெளிவரும் என தமிழக மக்களுக்கு உறுதி அளிக்கிறேன். அவரை என் வாழ்நாளில் நான் சந்தித்ததே இல்லை. நான் நிர்மலா தேவி முகத்தை கூட இதுவரை பார்த்தது இல்லை. எனது பாதுகாவலர்களைத் தாண்டி ஒரு பறவை கூட என்னை அணுக முடியாது.

பேராசிரியரை நிர்மலா தேவி விவகாரம் குறித்து விசாரிக்க என்னைக் கேட்காமல் பல்கலைக்கழக நிர்வாகம் 5 பேர் கொண்ட குழுவை நியமித்தது. பேராசிரியை விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை. விசாரணை ஆணைய அறிக்கை வந்து தேவைப்பட்டால் சிபிஐ விசாரணை அமைக்கும் முதல் ஆளாக நான் இருப்பேன்.

எனக்கு பேரனுக்கு பேரன் இருக்கும் போது , என்னைப் பற்றி தவறான கருத்துகளைப் பேச வேண்டாம். பல்கலைக்கழக விவகாரங்களில் மாநில அரசு தலையிட முடியாது. மதுரை காமராஜர் பல்கலைக்கழக விதிகளின் படி ஆளுநரே அதன் வேந்தர். பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் சட்டவிதிகளின்படியே, சந்தானம் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருகிறேன். அரசியலமைப்பு சட்டப்படி ஆளுநரே மாநிலத்தின் தலைவர். அவர் இது குறித்து எந்த அமைச்சர்களின் ஆலோசனையையும் கேட்க வேண்டியதில்லை. மாநில அரசு பல்கலைக்கழக விவகாரங்களில் தலையிட முடியாது.

ஆளுநர் என்று என்னைக் குறிப்பிடவில்லை, தாத்தா என்றுதான் என்னை அந்தப்பெண் குறிப்பிட்டுள்ளார். அந்தப்பெண்ணை இதற்கு முன் நான் பார்த்ததே இல்லை. அவர் யாரென்றே எனக்கு தெரியாது. போலீஸார் அவர்கள் வேலையை செய்வார்கள். பல்கலைக்கழக விதிமுறைப்படி இந்த விசாரணை நடக்கும்.

விசாரணையில் பெண்களை விசாரிக்கத் தேவைப்பட்டால் சந்தானம் பெண் அதிகாரிகளை பயன்படுத்திக்கொள்வார்.” என்றார்.

கவர்னர், நிர்மலாதேவி, அருப்புக்கோட்டை, கமிஷன், பல்கலைக்கழகம்

Leave a Reply