விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க கோபாலபுரத்திற்கு இன்று சென்றார்.

கருணாநிதிக்கு திருமாவளவன் பொன்னாடை அணிவித்தார். இருவரும் இன்றைய அரசியல் நிலவரம் குறித்து பேசினார்கள்.

20 நிமிடங்கள் இருவரும் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டனர். பின்னர் வெளியே வந்த திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது, பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், பா.ஜனதாவுடன் திமுக கூட்டணி அமைத்து போட்டியிடாது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியதை நான் வரவேற்கிறேன்.

மதவாத, ஜாதி வெறிப் பிடித்த கட்சிகளை அகற்றுவதிலும், மதசார் பற்ற கட்சிகளை ஒருங்கிணைப்பதிலும் ஆற்றல் படைத்தவர் கலைஞர். திமுகவுடன் விடுதலை சிறுத்தைகள் கூட்டணி தொடரும்.

இந்திய துணை தூதர் தேவயானி அவமானப்படுத்தப்பட்ட விவகாரத்தில் அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் அமெரிக்கா பிடிவாதமாக உள்ளது. அந்நாட்டுடனான உறவை முறிக்க வேண்டும் என்று தொல்.திருமாவளவன் கூறினார்.

Leave a Reply