shadow

நோயாளியின் உரிமைகள்
patients
சாதாரணக் காய்ச்சல் என்றால்கூட சிறப்பு மருத்துவர்களைத் தேடிப் போகிற காலம் இது. பல மருத்துவமனைகள், நோயாளிகளைப் பணம் காய்க்கும் மரமாகவே பார்க்கின்றன. என்ன சிகிச்சை, எவ்வளவு செலவாகும், சிகிச்சை முறையின் சாதக,பாதகம் என்னென்ன என்பவற்றைப் பற்றி எல்லாம் விளக்குவது இல்லை. ஆங்கிலத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தைக் கொடுத்து, கையெழுத்துப் போட்டுக்கொடுக்கச் சொல்கின்றனர். கையெழுத்துப் போட்டால்தான் சிகிச்சை என்ற நிலையில், அதில் என்ன எழுதி இருக்கிறது என்றுகூடப் படித்துப்பார்க்காமல் கையெழுத்துப் போடும் நிலைதான், பெரும்பான்மையான மருத்துவமனைகளில் உள்ளது. ஒரு மருத்துவமனைக்கு நோயாளியாகச் செல்லும்போது, நம் உரிமைகள் என்னென்ன எனத் தெரிந்துவைத்திருக்கிறோமா என்றால், இல்லை.

`மனித உரிமைகளுக்கான பொதுப்பிரகடனம் – 1948’தான் நோயாளிகளின் உரிமைகளுக்கு அடிப்படை. அதற்குப் பிறகு உலக அளவில் பல நாடுகளில், நோயாளிகளின் உரிமைகளைப் பாதுகாக்க அமைப்புகளையும் சட்டங்களையும் கொண்டுவந்தன. இந்தியாவில், 1995-ம் ஆண்டில், உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில், மருத்துவ சேவையை, நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்கொண்டுவந்து, ஆணையிட்டதுதான் இந்தியாவில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. `பாதிக்கப்பட்ட நோயாளிகள், இந்தச் சட்டத்தின் கீழ், சேவைக்குறைபாடு தொடர்பான வழக்குகளை, மருத்துவர் மீதும், மருத்துவமனைகள் மீதும் தொடுக்கலாம்’ என்கிறது உச்ச நீதிமன்றம்.

நோயாளியின் உரிமைகள்

நோயாளிகள், தங்கள் நோய் பற்றியும், மருத்துவச் சோதனை முடிவுகள், மருந்து, மாத்திரைகள் பற்றியும் தெரிந்துகொள்ளலாம்.

நோயாளிக்கு அளிக்கப்படும் சிகிச்சையானது கண்ணியமாகவும் கனிவாகவும்  இருக்க வேண்டும். எந்த வகையான துஷ்பிரயோகம், துன்புறுத்தல், புறக்கணிப்பு, சுரண்டல் போன்றவை இருக்கக் கூடாது.

அவரைப் பற்றிய ரகசியம், தனித்தன்மை, அவரது நம்பிக்கைகள், சமூக, கலாசார, மதரீதியான நம்பிக்கைகள் காக்கப்பட வேண்டும்.

நோயாளிக்கு இன்னென்ன உரிமைகள் உள்ளன என்பது பற்றி அவருக்கு வாய்மொழியாகவும், எழுத்து மூலமாகவும் சொல்ல வேண்டும்.

சிகிச்சை பற்றியும், அதில் உள்ள அபாயங்கள், பாதிப்புகள் பற்றியும் தெரிவிக்க வேண்டும்.

மருத்துவரை, மருத்துவமனையைக் கேள்விகேட்கவும், தகுந்த விளக்கங்கள் பெறவும் உரிமை உள்ளது.

சிகிச்சை தொடர்பாக இன்னொரு மருத்துவரிடம் இரண்டாவது கருத்துரை (ஒப்பீனியன்) பெறலாம்.

அறுவைசிகிச்சையின் பலன், பாதிப்புகள், செலவு உட்பட எல்லாவற்றையும் நோயாளியும், அவரது நெருங்கிய உறவினரும் முழுமையாகத் தெரிந்துகொள்ளலாம்.

அலட்சிய சிகிச்சையிலிருந்து பாதுகாக்கப்படுவதற்கும், சேவைக்குறைபாட்டுக்கும் இழப்பீடு பெற உரிமை உண்டு.

தரமற்ற மருந்து, தவறான மருத்துவ சிகிச்சை, போலி மருத்துவர்களிடம் இருந்து பாதுகாப்பு, இழப்பீடு ஆகியவற்றுக்கான உரிமை.

உடல்நிலையைப் பொறுத்து உள் நோயாளியாகவே, வெளி நோயாளியாகவோ சிகிச்சைப் பெற்றுக்கொள்ளும் உரிமை.

ஒரு மருத்துவரின் சிகிச்சையை ஏற்றுக்கொள்ளவும் நிராகரிக்கவும் நோயாளிக்கு உரிமை உண்டு.

முறைகேடுகள் ஏதும் நடந்தால், நிர்வாகத்திடம் புகார் அளிக்கும் உரிமை.

தன்னுடைய பிரச்னைக்கு வேறு ஒரு மருத்துவரிடம் சிகிச்சை பெற விரும்பினால், தற்போது பெறும் சிகிச்சையை நிறுத்திக்கொள்ள முழு உரிமையும் உள்ளது.

யாரிடம் புகார் செய்வது?

கிரிமினல் குற்றமாக இருந்தால், காவல் துறையை அணுகலாம்.

கவனக் குறைவு, சேவைக் குறைபாடு போன்ற குற்றங்களாக இருந்தால், நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகலாம்.

சட்டத்துக்குப் புறம்பாக, ஒழுங்குநெறி தவறிய குற்றமாக இருந்தால், காவல்துறை மற்றும் இந்திய மருத்துவ சங்கத்தை (Medical Council of India) அணுகலாம்.

கொடுக்கும் புகாரின் தன்மையைப் பொறுத்து இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

நோயாளியின் கடமைகள்

நோயாளிகளுக்கு எப்படி உரிமைகள் உள்ளதோ, அதேபோல சில கடமைகளும் உள்ளன. அதாவது, தன்னுடைய சிகிச்சை பற்றி தனக்குச் சொல்வார்கள் என்று காத்திருக்காமல், கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டியது அவரது கடமை.

டாக்டர் கேட்கும் கேள்விகளுக்கு முழுமையான, தனக்குத் தெரிந்த பதிலைச் சொல்ல வேண்டும்.

டாக்டர் பரிந்துரைத்தபடி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். 10 நாள் மாத்திரை எடுக்கச் சொன்னால், ஐந்தாவது நாளிலேயே நிறுத்திவிடுவது தவறு.

தன்னைப் பற்றியும், தன்னுடைய பழக்கவழக்கம் பற்றியும், மருந்து ஒவ்வாமை ஏதேனும் இருந்தால் அதைப் பற்றியும் கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.

டாக்டர் பரிந்துரைத்த மருந்துச் சீட்டு, பரிசோதனை முடிவுகள், பணம் கட்டிய ரசீது போன்றவற்றைப் பத்திரமாக வைத்திருக்க வேண்டும். ஒருவேளை நீதிமன்றம் செல்லும் நிலை ஏற்பட்டால், அவை உதவியாக இருக்கும்.

சிகிச்சை அளிக்கும் மருத்துவர், மருத்துவப் பணியாளரை மரியாதையுடன் நடத்துவதும் நோயாளியின் கடமை.

பொதுவாக, நோயாளிகளின் சட்டபூர்வமான உரிமைகள் குறித்து மருத்துவமனைகளே போதிய விழிப்புஉணர்வு இல்லாமல்தான் இருக்கின்றன, இந்த நிலை மாற வேண்டும் என்பது அவசியம் மட்டும் அல்ல அவசரமும்கூட.

Leave a Reply