தமிழ், மற்றும் தெலுங்கில் பல படங்கள் நடித்த நடிகர் உதயகிரண் நேற்று ஆந்திராவில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் ஆந்திர சினிமாவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

தமிழில் பொய், வம்புச்சண்டை, பெண் சிங்கம் ஆகிய படங்களில் நடித்தவர் உதயகிரண். இவர் தெலுங்கில் சித்திரம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் பல தெலுங்கு படங்களில் நடித்து முன்னணி நடிகர்களின் வரிசையில் சேர முயற்சி செய்துகொண்டிருந்தார். இவர் நடித்து கடைசியாக வெளிவந்த திரைப்படம் ஜெய் ஸ்ரீராம் என்ற தெலுங்கு படம்தான்.

நேற்று இரவு இவரது மனைவி வெளியூர் சென்றிருந்தபோது, தனது படுக்கையறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். ஊரில் இருந்து திரும்பி வந்த மனைவி, கணவர் தூக்கில் தொங்குவதை பார்த்து கதறி அழுதார். அவரது கூக்குரலை கேட்ட அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் வந்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டது.,

உதயகிரண், விஷிதா என்ற பெண்ணை காதலித்து  திருமணம் செய்துகொண்டவர். இருவரும் எவ்வித பிரச்சனையும் இல்லாமல்தான் குடும்ப வாழ்க்கையை நடத்திக்கொண்டிருந்தனர். தற்கொலைக்கு என்ன காரணம் என்பது இதுவரை புரியாத மர்மமாகவே உள்ளது.

நடிகர் உதயகிரண் மறைவிற்கு ஆந்திர திரையுலகமும், தமிழ்த்திரையுலகமும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது. பிரபல நடிகர்கள் பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Leave a Reply