shadow

LRG_20150408113009236114

ராசிபுரம்: தட்டான்குட்டையில், 300 ஆண்டுகளுக்கும் மேல் கொண்டாடப்படும், பச்சைத்தண்ணி மாரியம்மன் கோவில் திருவிழாவில், தண்ணீரில் விளக்கு எரியும் நிகழ்ச்சி பக்தர்களை பரவசப்படுத்தி உள்ளது. ராசிபுரம் அடுத்த தட்டான்குட்டையில், பிரசித்தி பெற்ற பச்சைத்தண்ணி மாரியம்மன் கோவில் உள்ளது. கடந்த, 300 ஆண்டுகள் பழைமையான இக்கோவிலில், ஆண்டு தோறும் பங்குனி மாதம் திருவிழா, கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு விழா கடந்த, 5ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நேற்று முன்தினம் காலை, பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும், ஸ்வாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. நேற்று அதிகாலை, 4.30 மணிக்கு, கோவில் கிணற்றில் பூசாரி புனித நீராடி, சிறிய குடத்தில் தண்ணீர் எடுத்து வந்தார். அதை தொடர்ந்து, கோவில் முன் சுடர் விட்டு எரிந்து கொண்டிருந்த விளக்கில் இருந்த எண்ணெய் முழுவதையும் வடித்தார்.பின்னர் கிணற்றில் இருந்து கொண்டு வரப்பட்ட பச்சைத்தண்ணீரை, விளக்கில் ஊற்றி பற்ற வைத்தார். அப்போது திரி சூவாலையுடன் எரிந்தது. இக்காட்சியை சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கண்டு பரவசமடைந்தனர். தொடர்ந்து, ஒன்றை மணி நேரம் எரிந்த விளக்கு, காலை 6 மணிக்கு அணைந்தது. இந்நிகழ்ச்சி, ஆண்டுதோறும் ஒருநாள் மட்டும் தொன்று தொட்டு நடந்து வருகிறது. .

இரவு, 7 மணிக்கு பச்சைத்தண்ணி மாரியம்மன் ஸ்வாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதையடுத்து மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கர் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் மக்கள் செய்திருந்தனர். கோவில் பூசாரிகள் வெங்கட், நடேசன் ஆகியோர் கூறியதாவது: பச்சைத்தண்ணி மாரியம்மன் கோவில் திருவிழா, நான்கு தலைமுறையாக கொண்டாடப்பட்டு வருகிறது. எங்கள் முன்னோர் காலத்தில், ஒரு முறை கோவில் விளக்கில் இருந்து எண்ணெய் தீர்ந்துவிடும் நிலையில் இருந்தது. அப்போது ஊர் தர்மகர்த்தாவிடம் சென்று, விளக்குக்கு எண்ணெய் வாங்க பணம் கேட்டனர்.அதற்கு அந்த தர்மகர்த்தா, “என்னிடம் காசு இல்லை எனக்கூறியதுடன், சக்தி உள்ள ஸ்வாமி மாரியம்மன்தானே, தண்ணீர் ஊற்றி பற்றவை எரியும் என, விரக்தியில் கூறினார். அதை தொடர்ந்து பூசாரிகள் தண்ணீர் ஊற்றி பற்றவைத்தனர். அப்போது தீ சுடர் விட்டு எரிந்ததை கண்டு ஆச்சரியப்பட்டனர். அன்று முதல் ஸ்வாமி “பச்சைத்தண்ணி மாரியம்மன் என, ஸ்வாமி அழைக்கப்படுகிறது. திருவிழாவின் போது, தண்ணீர் ஊற்றி பற்றவைத்து வழிபாடு நடத்துவது தொன்று தொட்டு நடந்து வருகிறது. அதன் கிளை கோவில், சேலம் ஐந்துசாலையிலும், மும்பையிலும் உள்ளது என்றனர்.

Leave a Reply