தாய்லாந்து பிரதமர் யிங்லக் ஷினவத்ரா இரண்டு நாள்களுக்குள் பதவி விலகவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கெடு விடுத்துள்ளன.

ஊழல், முறைகேடுகள் காரணமாக ஆளும் பிய் தாய் கட்சி பதவி விலக வேண்டும், நாட்டில் உடனடியாக பொதுத்தேர்தல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த இரு வாரங்களாக எதிர்க் கட்சிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன. சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் ஏற்பட்ட கலவரத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 9-வது நாளாக திங்கள்கிழமையும் போராட்டம் நீடித்தது. பல்வேறு இடங்களில் போலீஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி கூட்டத்தை கலைக்க முயன்றனர். இதற்குப் பதிலடியாக போலீஸார் மீது கற்களை வீசி ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பிலும் பலர் காயமடைந்தனர்.

எதிர்க்கட்சிகளின் 2 நாள் கெடு குறித்து பிரதமர் யிங்லக் ஷினவத்ரா செய்தியாளர்களிடம் கூறியது:

நான் நிச்சயமாக பதவி விலக மாட்டேன். எதிர்க்கட்சிகளின் கோரிக்கைபடி சட்டத்துக்கு விரோதமாக, தேர்ந்தெடுக்கப்படாத ஓர் அமைப்பிடம் ஆட்சியை ஒப்படைக்கமாட்டேன். போராட்டத்தை ஒடுக்க எதற்கும் துணிந்துவிட்டேன். எனினும் இப்போதும் பேச்சுவார்த்தைக்குத் தயாராக உள்ளேன் என்றார்.

Leave a Reply