சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு நேற்று வந்த மர்ம கடிதத்தில் பிரதமர் மோடி வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்புவதற்குள் பாஜகவின் சென்னை அலுவலகம், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், கல்பாக்கம் அணுமின் நிலையம் ஆகியவற்றை குண்டு வைத்து தகர்ப்போம் என எழுதியிருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முகவரி எதுவும் இல்லாத அந்த கடிதம் கம்ப்யூட்டரில் டைப் செய்யப்பட்டிருப்பதாகவும், கடிதத்தின் கீழே அல்கொய்தா என்று குறிப்பிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து மாம்பலம் போலீஸ் நிலையத்தில் பா.ஜனதா நிர்வாகிகள் புகார் செய்தனர். இந்த மிரட்டல் கடிதம் காரணமாக சென்னையில் உள்ள பாஜக அலுவலகமான கமலாயம் கட்டிடத்திற்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த கடிதம் குறித்து தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:
வழக்கமாக வரும் கடிதங்களை பிரித்து பார்த்தபோது தான், இந்த வெடி குண்டு மிரட்டல் கடிதம் வந்திருப்பது தெரியவந்தது. அவர்கள் எங்களை மிரட்டியது பற்றி கவலையில்லை, அதற்கு நாங்கள் அஞ்சப்போவதும் இல்லை.
ஆனால் பொது மக்களுக்கு பிரச்சினையை உருவாக்கும் வகையில், பொது இடங்களில் தாக்குவோம் என்று தெரிவித்து இருந்ததால் உடனடியாக போலீசில் மர்ம கடிதம் குறித்து தகவல் தெரிவித்து இருக்கிறோம். அவர்கள் இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.