கத்தி படத்தின் தயாரிப்பாளர் குறித்த விளக்கத்தை ஏற்க முடியாது. கத்தி படத்தின் தயாரிப்பாளரை மாற்றும் வரை அல்லது படத்தை கைவிடும் வரை போராட்டம் செய்வோம் என லண்டன் மற்றும் பிரான்ஸில் உள்ள தமிழ் அமைப்புகள் ஆவேச அறிக்கை விட்டுள்ளன.
கத்தி படத்தின் தயாரிப்பாளர் குறித்து நேற்று ஐங்கரன் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பில் கருணாமூர்த்தி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அதில் “கத்தி” படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் சுபாஷ்கரன் அல்லிராஜா என்பது உண்மைதான். இதில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை. ஆனால் சுபாஷ்கரன் ராஜபக்சேவின் நண்பர் என்பது உண்மையில்லை. நாங்கள் விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள். நாங்கள் எப்படி ராஜபக்சேவுக்கு நெருக்கமாக இருக்கமுடியும்.
இலங்கையை விட்டு 30 வருடங்களுக்கு முன் வெளியேறிய நாங்கள் இலங்கை தமிழர்களுக்கும், புலிகளுக்கும் பல உதவிகள் செய்துள்ளோம். தமிழில் சேரன் இயக்கிய “பிரிவோம் சந்திப்போம்” என்ற படத்தை சுபாஷ்காரன் தயாரித்துள்ளார். அப்பொழுது பிரச்சனை எதுவும் செய்யாத தமிழ் அமைப்புகள் இப்பொழுது பிரச்சனை செய்வது உள்நோக்கம் கொண்டது.
இவ்வாறு ஐங்கரன் இண்டர்நேஷனல் கருணாமூர்த்தி கூறியுள்ளதை தமிழ் அமைப்புகள் ஏற்றுக்கொள்ளவில்லை. ராஜபக்சேவின் மூலம் இலங்கையில் 2007-ல் 2ஜி உரிமம் பெற்றது, லைக்கா கம்பெனியின் லைக்காஃப்ளை-க்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான நிலையத்தின் ஏஜென்சி வாங்கியது என அடுத்தடுத்து, அல்லிராஜா பலசலுகைகளை இலங்கை அரசிடம் இருந்து பெற்று வந்துள்ளார்.ராஜபக்சேவுக்கு நெருக்கமாக இல்லாமல் இந்த தொழில்களை லைக்கா நிறுவனம் நடத்த வாய்ப்பே இல்லை.
எனவே ஐங்கரன் கூறும் சமாதானங்களை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இந்தியாவில் தேர்தல் நடைபெறுவதால் விஜய்க்கு எதிராக குரல்கொடுக்க தமிழக அரசியல் கட்சிகள் தயங்குகின்றன. விஜய்யை எதிர்த்தால் விஜய் ரசிகர்களின் ஓட்டுக்களை இழக்க நேரிடும் என தமிழக அரசியல் கட்சிகள் பதுங்குகின்றன. ஆனால் நாங்கள் இதை சாதாரணமாக விடப்போவதில்லை. “கத்தி’ படத்தை கைவிடும்வரை ஓயமாட்டோம். அடுத்தமாதம் விஜய்யை நேரில் சந்தித்து எங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த உள்ளோம் என்று பிரான்ஸ் மற்றும் லண்டனில் இயங்கும் தமிழ் அமைப்பு இன்று ஃபேஸ்புக் மூலம் தெரிவித்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.