சரத்குமார் அணி மீது முதல்முறையாக கடுமையான கண்டனத்தை பதிவு செய்த சூர்யா
சமீபத்தில் முடிவடைந்த தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் தனது உடன்பிறந்த தம்பி கார்த்தி, பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட போதிலும், நடிகர் சூர்யா அமைதியாக இருந்த நிலையில் தற்போது அவர் சரத்குமார் அணிக்கு தனது கடுமையான கண்டனத்தையும், விஷால் அணிக்கு தனது பாராட்டுக்கள் மற்றும் செய்ய வேண்டிய கடமை குறித்தும் கடிதம் ஒன்றில் தெளிவாக விளக்கியுள்ளார். சூர்யா இன்று வெளியிட்டுள்ள ஒரு கடிதத்தைல் கூறியிருப்பதாவது:
நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்த தேர்தல் நமக்கு பல பாடங்களை கற்று தந்திருக்கின்றது. தேர்தலுக்காக நடந்த பிரச்சாரத்தில், வருந்ததக்க பல விஷயங்கள் அரங்கேறின. விமர்சனங்கள் எனும் பெயரில் தனிமனித தாக்குதல்கள் நடந்தன. சமாதான முயற்சிகள் தோல்வியுற்றன. பொறுப்பில் இருக்கும்போது செய்த ‘கடமைகள்’, ‘உதவிகளாக’ சித்தரிக்கப்பட்டன. ‘நடிகர்கள் ஒரே குடும்பம்’ என்று சொல்லிக்கொண்டே ஜாதி, மொழி, இனத்தின் பெயரால் பிரிவினை பேசப்பட்டது. படத்தின் வெற்றி தோல்விகளை வைத்து கேலி செய்தனர். விருப்பப்பட்டவர்களுக்கு ஆதரவு தெரிவித்த காரணத்தால், மதிப்புக்கும், மரியாதைக்கும் உரிய மூத்த கலைஞர்கள் மீது, ‘பண்பு மறந்து, வார்த்தை தடித்து’ அவதூறுகள் வீசப்பட்டன. இத்தகைய சூழல் இனி ஒருபோதும் வராமல் தடுப்பது நம் அனைவரின் பொறுப்பு.
வெற்றி பெற்ற புதிய பொறுப்பாளர்களுக்கு, சக கலைஞனாக என்னுடைய வேண்டுகோள் இவை. கடமைகளை, உதவிகளாக நினைத்து செய்யாதீர்கள். மூத்த கலைஞர்களை எப்படி நடத்த வேண்டும் என்பதில் முன்னுதாரணமாக இருங்கள். அனைத்து கலைஞர்களுக்கும் நன்மை கிடைக்க பாடுபடுங்கள். கொடுத்த வாக்குறிதிகளை இதயத்திலிருந்து நிறைவேற்றுங்கள். பகைமை விரட்டி, ஒற்றுமைக்கு வித்திடுங்கள். சககலைஞர்கள் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் எதிர்பார்ப்புமே, உங்களின் உண்மையான வெற்றி. நடிகர்கள் மற்றும் திரைத்துறையின் வளர்ச்சிக்கு அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.
Leave a Reply
You must be logged in to post a comment.