மத்திய அமைச்சர் சசிதரூர் மனைவி சுனந்தா மர்மமான மரணத்திற்கு காரணம் என கூறப்படும் பாகிஸ்தான் பெண் நிருபர் மெஹர் தரார் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் தான் நிரபராதி என்றும் சுனந்தா மரணத்திற்கு தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

இந்திய அமைச்சர் சசிதரூரை தான் இரண்டு முறை மட்டுமே நேரில் சந்தித்ததாகவும், கடந்த வருடம் ஏபரல் மாதம் இந்தியாவிலும், பின்னர் ஜூன் மாதம் துபாயிலும் சந்தித்ததாகவும் அதன்பின்னர் அவரிடம் இமெயில் மற்றும் தொலைபேசியில் மட்டுமே பேசி வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இமெயில் மற்றும் தொலைபேசியில் நாங்கள் தொடர்பு கொள்வது சுனந்தாவுக்கு பிடிக்கவில்லை என்றும், அதன் காரணமாக அவர் என் மீது தேவையில்லாத சில விமர்சனங்களை இணையத்தில் பதிவு செய்தார் என்றும் கூறிய மெஹர், காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லாவை தான் பேட்டியெடுத்தபோது சுனந்தா “முதலில் பாகிஸ்தான் ராணுவத்தை அனுப்பும், பின்னர் பத்திரிகையாளர்களை அனுப்பும்” என காட்டமாக விமர்சனம் செய்ததையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சசிதரூருக்கும் அவரது மனைவிக்கு வேறு ஏதாவது கருத்து வேறுபாடு இருந்திருக்கலாம் என்றும் சுனந்தாவின் மரணத்திற்கு தான் எவ்விதத்திலும் பொறுப்பாக முடியாது என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

Leave a Reply