மத்திய அமைச்சர் சசிதரூர் மனைவி மரணத்திற்கு அளவுக்கதிகமாக உட்கொண்ட மாத்திரைகளே காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

டெல்லி நட்சத்திர ஓட்டலில் மர்மமான முறையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மத்திய அமைச்சர் சசிதரூர் மனைவி சுனந்தா மரணம் அடைந்தார். அவருடைய மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஊடகங்கள் பலவாறு கருத்து தெரிவித்து வந்த நிலையில் நேற்று பிரேதப்பரிசோதனை அறிக்கை வெளிவந்துள்ளது.

அதில் மனத்தளர்ச்சியை நீக்கும் மாத்திரைகளை சுனந்தா அளவுக்கு அதிகமாக உட்கொண்டதே மரணத்திற்கு காரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சுனந்தாவின் உடலில் அல்ப்ரக்ஸ் என்ற மருந்து அதிக அளவில் இருந்த அடையாளம் இருந்ததாகவும், அதுவே அவருடைய மரணத்திற்கு காரணம் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. சுனந்தா சுமார் 27 அல்ப்ரக்ஸ் மாத்திரைகள் உட்கொண்டிருக்கலாம் என தெரிகிறது.

சுனந்தாவின் ரத்தத்தின் ஆல்கஹால் தடயம் எதுவும் இல்லை என்றும் அவரது உடலில் ஏற்பட்டுள்ள சிறு காயங்களால் மரணம் ஏற்பட வாய்ப்பு இல்லை என்றும் அந்த அறிக்கை உறுதிசெய்துள்ளது. இந்த அறிக்கையின்படி சுனந்தா தற்கொலைதான் செய்து கொண்டார் என்பது உறுதியாக தெரிய வந்துள்ளது.

Leave a Reply