shadow

subramaniyan swamyபாஜக தலைவரான சுப்பிரமணியன் சுவாமி அடிக்கடி தனது அறிக்கைகள் மூலம் பேட்டிகள் மூலம் மட்டுமே பரபரப்பை ஏற்படுத்தி வருபவர். இந்நிலையில் இன்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் தாலியை எடுத்து மணமகள் கழுத்தில் கட்ட முயற்சி செய்ததாகவும், அதை அருகில் இருந்த சந்திரலேகா தடுத்து நிறுத்தியதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. இதுகுறித்த வீடியோ ஒன்று தற்போது பெரும் பரபரப்புடன் பரவி வருகின்றது.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள முருகன் கோயில் இன்று சுப்பிரமணியசுவாமிக்கு நெருக்கமான  பாலசுப்பிரமணியன் என்பவரது திருமணத்தை அவர் நடத்தி வைக்க சுப்பிரமணியன் சுவாமி நெல்லைக்கு வந்திருந்தார். பாலசுப்பிரமணியன்-வேணி ஆகியோரின் திருமணம் இன்று காலை நடைபெற்ற போது மணமகளின் பெற்றோர் தாம்பாள தட்டில் தாலியை வைத்து அதை சுப்பிரமணியன் சுவாமியிடம் கொடுத்து மணமகனிடம் எடுத்துக்கொடுக்குமாறு கூறினர்.

தாலியை பெற்றுக் கொண்டு கையில் வைத்தபடி, கண்களை மூடிக் கொண்டு இறைவனிடம் வேண்டிக்கொண்ட சுப்பிரமணியன் சுவாமி, பின்னர், தாலியை மணமகனிடம் கொடுப்பதற்கு  பதிலாக அவரே மணமகள் கழுத்தில் கட்டுவதற்காக சென்றார். அப்போது, அருகில் இருந்த சந்திரலேகா பதறியபடி, சுப்பிரமணியன் சுவாமியை கையை தட்டி தடுத்ததோடு, மணமகனிடம் தாலியை கொடுக்குமாறு சொன்னார். அதன் பின்னரே சுதாரித்துக் கொண்ட சுப்பிரமணியன் சுவாமி, மணமகனிடம் தாலியை கொடுத்தார். இதைத் தொடர்ந்து மணமகன், மணமகள் கழுத்தில் தாலி கட்டினார்.

மணமகனிடம் தாலியை கொடுக்க வேண்டிய சுப்பிரமணியன் சுவாமி, மணமகளின் கழுத்தில் தாலி கட்ட முயன்ற சம்பவம் மணமகள் உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பான செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, சுப்பிரமணியன் சுவாமி ஏகத்திற்கும் கலாய்க்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்.

Leave a Reply