shadow

மாணவர்கள் ‘ஓவர்டைம்’ வேலை செய்யும் ரோபோக்கள் அல்ல. ராமதாஸ் காட்டமான அறிக்கை

ramdossகடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் தொடர் மழை பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விடுமுறையை சரிக்கட்ட வரும் நாட்களில் சனிக்கிழமையும் பள்ளிகள் இயங்கும் என ஒருசில தனியார் பள்ளிகள் அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“ஒரு மாதத்திற்கும் மேலாக பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், அந்த நாட்களை ஈடுகட்டும் வகையில் ஜனவரி  மாதம் வரை சனிக்கிழமை களிலும் பள்ளிகள் செயல்படும் என தனியார் பள்ளிகள் அறிவித்துள்ளன. சில அரசு பள்ளிகளும் இதே அறிவிப்பை வெளியிட்டுள்ளன. பள்ளி பணிநேரமும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பாடநூல்களிலுள்ள அனைத்துப் பாடங்களையும் மாணவனின் மூளைக்குள் எப்படியாவது திணிக்க வேண்டும்; மனப்பாடம் மூலம் திணிக்கப்பட்ட பாடங்களை, தேர்வு என்ற பெயரில் நடத்தப்படும் ஆய்வின் போது விடைத்தாளில் கொட்டவைக்க வேண்டும் என்பது தான் கல்வி’’ என்ற எண்ணம் தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அதன் விளைவு தான் மாணவர்களின் வலிகள், வேதனைகள், மன அழுத்தம் ஆகிய எதைப்பற்றியும் கவலைப்படாமல், சூதாட்டத்தில் விட்டதை பிடிக்க துடிப்பவர்களைப் போல, வெள்ள நாட்களில் நடத்தப்படாத பாடங்கள் அனைத்தையும் நடத்தி முடிப்பதற்காக விடுமுறை நாட்களிலும்  பள்ளிக்கூடங்கள் நடைபெறும் என தனியார் பள்ளி நிர்வாகங்கள் அறிவித்திருக்கின்றன. சில அரசு பள்ளிகளும் இதே அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

அடித்தட்டு குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் வெள்ளத்தில் தங்களின் பாடநூல், சீருடைகள் ஆகியவை மட்டுமின்றி தங்களின் வீடு, உடைமைகள் உள்ளிட்ட அனைத்தையும் இழந்திருக்கிறார்கள். பல மாணவர்கள் தங்களின் குடும்ப உறுப்பினர்களை மழை& வெள்ளத்திற்கு பலி கொடுத்திருக்கின்றனர். சாவின் விளிம்பு வரை சென்று நல்வாய்ப்பாக மீண்டு வந்த மாணவர்களும் உண்டு.  அடுக்குமாடி குடியிருப்புகளையும் மூழ்கடித்த வெள்ளத்தில் சிக்கி பல நாட்கள் உணவின்றி பட்டினியில் வாடிய அனுபவத்தை பணக்கார மாணவர்களுக்கும் இம்மழை வழங்கியுள்ளது.

இந்த மன அழுத்தத்தில் இருந்து மாணவர்கள் மீண்டு வருவதற்கு இன்னும் பல மாதங்கள் ஆகலாம். மாணவர்கள் பற்றிய இந்த உளவியலை பள்ளி நிர்வாகங்கள் புரிந்து கொண்டு அவர்களுக்கு மன நல ஆலோசனைகளை வழங்க வேண்டும்; கவலைகளை மறந்து, சக மாணவர்களுடன் கலந்து மகிழ்ச்சியாக விளையாடப் பழக்க வேண்டும்; அதன்பிறகு தான் பாடம் என்பதையே அவர்களுக்கு நினைவூட்ட வேண்டும். அப்போது தான் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இயல்பு நிலைக்கு வருவார்கள்.

இவற்றையெல்லாம் விடுத்து, பள்ளி திறந்த முதல் நாளிலேயே மொத்த புத்தகங்களையும் கையில்  கொடுத்து படித்து ஒப்புவிக்கச் செய்வதற்கும், விடுமுறை நாட்களிலும் பள்ளிக்கு வர வேண்டும் என கட்டாயப்படுத்துவதற்கும் அவர்கள் ‘ஓவர்டைம்’ வேலை செய்யும் ரோபோக்கள் அல்ல… குழந்தைகள்  என்பதை கல்வியாளர்கள் உணர வேண்டும்.

எனவே, அரசு பள்ளிகளாக இருந்தாலும், தனியார் பள்ளிகளாக இருந்தாலும் சனிக்கிழமைகளில் வகுப்புகளை நடத்தக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெளிவான உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும்.

அதுமட்டுமின்றி, ஏற்கனவே வலியுறுத்தியதைப் போல அரையாண்டுத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்; அதேபோல் ஆண்டுத் தேர்வில் அனைவரும் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும். அத்துடன் தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளின் மாணவர்களுக்கு  அடுத்து வரும் பருவங்களுக்கான  கல்விக் கட்டணத்தையும் ரத்து செய்ய தனியார் கல்வி நிறுவன உரிமையாளர்கள் முன்வர வேண்டும்”  என்று  தெரிவித்துள்ளார்.

Leave a Reply