shadow

e1764fb1-f050-4a00-ad11-8af65c166124_S_secvpf

பக்கவாதம் வந்த பின் பழைய நிலைக்கு திரும்புவது சாதாரண விஷயம் கிடையாது. பெரும்பாலும் நடுத்தர வயதினரைத் தான் பக்க வாதம் தாக்கும். இப்போது வயது வித்தியாசம் பார்க்காமல் யாரை வேண்டுமானாலும் பக்க வாதம் தாக்குகிறது.

உடல் பருமன், அதிகக் கொழுப்பு, ரத்த அழுத்தம், சர்க்கரை போன்ற பிரச்னை உள்ளவர்களை வாதம் எளிதில் தாக்கும். நடுத்தர வயதினரின் உடலில் ஏற்படும் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் இந்த இரண்டும் தான் வாதம் ஏற்படக் காரணம் ஆகிறது.

ரத்த அழுத்தத்தின் காரணமாக மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு வாத நோய் வரலாம். ரத்த அழுத்தத்தின் அடுத்த கட்டமாக மூளைக்கு செல்லும் சிறிய ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைபடுகிறது.

ரத்த ஓட்டம் தடை பட்ட மூளைப் பகுதியுடன் தொடர்புடைய உடல் உறுப்பில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மூளையில் உண்டாகும் பாதிப்புக்கு ஏற்ப முகம், கை, கால் அல்லது முழு  பக்கவாதம் ஏற்படலாம்.

இத்துடன் தலையில் அடிபட்டு உண்டாகும் மூளை பாதிப்பின் காரணமாக வாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. நாள்பட்ட நோய்களான இதய நோய், சிறுநீரகப் பழுது, அறுவை சிகிச்சையில் ஏற்படும் சிக்கல்கள்,  ரத்தக் குழாய் அடைப்பு மற்றும் ரத்தக் கட்டிகள் ஆகியவற்றாலும் வாத நோய் வரலாம்.

குழந்தைகளுக்கு ஏற்படும் பிளீடிங் டிஸ்ஆர்டரின் காரணமாகவும், ரத்த சம்பந்தப்பட்ட வியாதிகளாலும் பக்கவாதம் தாக்கலாம். பக்கவாதத்துக்கு முன்பே உடலில் சில அறிகுறிகள் தென்படும்.

தலைவலி, வாந்தி மற்றும் சுயநினைவை இழத்தல், கை கால் மரத்துப் போதல், பேச்சு குளறுதல், நடுக்கம், தலைசுற்றல், கை கால் வலு இழத்தல் போன்ற பிரச்னைகள் வரும்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

இந்த அறிகுறி தென்படுபவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகி ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை, ரத்த ஓட்டம் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். மன அழுத்தத்தின் காரணமாக பக்கவாதம் வர வாய்ப்புள்ளது.

பரபரப்பாக மன அமைதியின்றி இருத்தல், சரியான நேரத்துக்கு தூங்காமல் இருத்தல், தொடர் மன அழுத்தம் ஆகியவை பக்கவாதம் வர வழியமைத்துக் கொடுக்கிறது.

சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தங்களது வாழ்க்கை முறையை அமைதியானதாக மாற்றிக் கொள்ள வேண்டும். சரியான நேரத்துக்கு தூங்குவதும், குறிப்பிட்ட நேரம் தூங்கி எழுவதும் அவசியம்.

சரிவிகித சத்துணவை எடுத்துக் கொள்ள வேண்டும். கொழுப்பு உணவுகளை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் கொழுப்பு கட்டிகள் ரத்த ஓட்டத்தை தடுப்பதாலும் வாதநோய் தாக்கும்.

வாதத்தின் அடுத்த கட்டமான உடல் செயலிழத்தல், நினைவிழத்தல் போன்ற பிரச்னைகளை இதன் மூலம் தடுக்கலாம்.

Leave a Reply