விஜய், அஜீத், ஆகியோர்களுக்கு அடுத்த இடத்தை கிட்டத்தட்ட பிடித்து விட்ட நிலையில் இருக்கும் வளர்ந்து வரும் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன், விஜய், அஜீத் எடுக்காத ரிஸ்க்கை எடுக்க தயாராகிவிட்டார். அதுதான் சொந்தப்படம் என்ற ரிஸ்க்.
சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள ‘ரஜினிமுருகன்’ அடுத்தமாதம் வெளியாகும் என எதிர்பார்க்கும் நிலையில் அடுத்த படத்திற்கான பூஜை இன்று போடப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பர் ஆர்.டி.ராஜா ஆரம்பித்துள்ள புதிய பட நிறுவனமான 4ஏஎம்ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரிக்கவிருக்கும் முதல்படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கின்றார். ஆனால் இந்த படத்திற்கு பணம் முதலீடு செய்வது சிவகார்த்திகேயன் தான் என்று கூறப்படுகிறது.
விஜய் நடித்து வரும் ‘விஜய் 59’ படத்தின் இயக்குனர் அட்லியின் உதவியாளர் பாக்யராஜ்கண்ணன் இயக்கும் இந்த படத்தில் கோலிவுட்டின் பிரபலங்கள் பலர் பணிபுரியவுள்ளனர். இந்த படத்தில் பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார், அனிருத் இசையமைக்கிறார், சண்டைப்பயிற்சி அனல்அரசு, படத்தொகுப்பு ரூபன், கலைஇயக்கம் டி.முத்துராஜ், ஒலிவடிவமைப்பு ரசூல்பூக்குட்டி இவர்களோடு வெளிநாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட ஷான்புட் என்கிற ஆஸ்கர்விருது பெற்ற மேக்கப்கலைஞரும் இந்தப்படத்தில் பணியாற்றவிருக்கிறாராம்.
பிரமாண்டமாக தயாராகவுள்ள இந்த படத்தில் இதுவரை இல்லாத வித்தியாசமான கெட்டப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளாராம். இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.