சிங்கப்பூர் விமான நிலையத்தில் திடீர் தீவிபத்து.
நேற்று மாலை சிங்கப்பூர் சர்வதேச விமான நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விமான நிலையத்தில் உள்ள ஏசி கருவியில் ஏற்பட்ட பழுதே தீவிபத்துக்கு காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சிங்கப்பூர் சாங்கி என்ற சர்வதேச விமான நிலையத்தில் நேற்று மாலை 5.40 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. விமான நிலையத்தின் 2-வது டெர்மினல் பகுதியில் ஒரு அறையில் ஏற்பட்ட இந்த தீ, பின்னர் மிக வேகமாக விமானம் புறப்படும் பகுதியில் உள்ள ஹால் வரை பரவியதால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. இதுகுறித்த தகவல் அறிந்த உடனே தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீவிபத்து காரணமாக சாங்கி விமான நிலையம் 3 மணி நேரம் மூடப்பட்டது. மேலும் தீ விபத்தை பயன்படுத்தி அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க உடனடியாக பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டது.
மேலும் சாங்கியில் இருந்து புறப்பட இருந்த 40 விமானங்களின் போக்குவரத்து தாமதப்பட்டது. ஆயிரக்கணக்கான பயணிகள் வெளியேற்றப்பட்டனர். இந்த தீவிபத்தில் ஏற்பட்ட புகை காரணமாக 7 பேர் பாதிக்கப்பட்டதாகவும், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
.
Leave a Reply
You must be logged in to post a comment.