shadow

தமிழகத்திற்கு தண்ணீர் இல்லை. மத்திய அமைச்சர் முன்னிலையில் நடந்த இருமாநில கூட்டத்தில் சித்தராமையா அறிவிப்பு

uma-bharathiகாவிரியில் இருந்து கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டபோதிலும், கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட மறுத்துள்ளது. இந்நிலையில் சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி, காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பாக தமிழக, கர்நாடக மாநில பிரதிநிதிகளுடன் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி இன்று பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த பேச்சுவார்த்தியின்போது ‘சுப்ரீம் கோர்ட் ‘வாழு வாழவிடு’ என்று அறிவுரை கூறியுள்ளது. ஆனால், நாங்களும் வாழ வேண்டும் அல்லவா. உச்ச நீதிமன்றம் எங்களையும் வாழ அனுமதிக்க வேண்டும். தற்போதைய சூழலில் கர்நாடக அணைகளில் உள்ள நீரின் அளவு மாநிலத்தின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு மட்டுமே இருப்பதால் காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று திட்டவட்டமாக கூறினார்.

இந்த கூட்டத்தில் தமிழக முதல்வரின் சார்பில் கலந்து கொண்ட பொதுப்பணித் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசியபோது, ‘காவிரி நீர் திறக்கப்பட்டால்தான் ஒரு போக சம்பாவாவது தமிழக விவசாயிகளால் பயிரிட முடியும். எனவே, கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட் உத்தரவை ஏற்று காவிரி நீரை தமிழகத்துக்கு திறந்துவிடுவதே சரியானதாகும். ஆனால், கர்நாடகா அரசோ காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடாமல் இருக்கிறது. இதை நீதிமன்ற அவமதிப்பாக கருத வேண்டும். கர்நாடக அரசு அரசியல் சாசனத்துக்கு எதிராகவும், கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறது” என்றார்.

தற்போது இந்த கூட்டம் நடைபெற்று வருவதாகவும் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி இன்னும் சில நிமிடங்களில் தனது முடிவை அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply