shadow

Bhogar - Bodhi Dharma

பழனி முருகன் கோவிலில் உள்ள முருகன் சிலை நவ பாசானத்தால் ஆனது என்று நமக்கெல்லாம் தெரியும், ஆனால் அந்த சிலை யாரால் செய்யப்பட்டது என்பது தெரியாது. சதுரகிரி தலப்புராண நூலில் கூறப்பட்டுள்ள வரலாற்றை படித்துப் பார்த்தால் முருகன் சிலை போகர் என்ற சித்தரால் உருவாக்கப்பட்டது என்பது தெரிகிறது.
சித்தர் போகர், இறந்தவர்களை பிழைக்க வைக்கும் சஞ்சீவினி மந்திரம் அறிந்தவர். உலோகங்களை ரசவாதத்தினால் பொன்னாக்கும் வித்தை அறிந்தவர், திருசெங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வர் நவபாசானத்தால் உருவாக்கியவர் போகரே. அவருடைய பூர்வீகம் சீன நாடு. தாய் தந்தையர் சலவைத் தொழிலாளிகள் என்றும் வரலாற்றில் காணலாம். எதனால் அப்படி குறிப்பிட்டு இஇருக்கிறார்கள் என்றால் அவர் எழுதியுள்ள தமிழ் மொழியில் எழுதியிருப்பதை விட சீன மொழியில் எழுதி இருப்பது அதிகம், போகர் எப்படி சித்தர் ஆனார் என்பதைப் பார்ப்போம்.

dsc00251
மேருமலையில் சுற்றி போகர் வந்து கொண்டு இருந்தபோது ஒன்பது சித்தர்கள் ஐயக்கியமாகி இருந்த இடம் கண்ணில் பட்டது, அவர் மனதில் ஏதோ தோன்ற அந்த சமாதிகளின் முன்பு அன்ன ஆகாரமின்றி அமர்ந்து மனதை ஒருநிலைப்படுத்தி தவம் இருந்தார், சில காலம் கழித்து சமாதியில் இருந்து 9 சித்தர்களும் அவருக்கு தரிசனம் கொடுத்து இறந்தவர்களை பிழைக்க வைக்கும் காயகல்ப முறையை உபதேசம் செய்தார்கள்.
இந்த சஞ்சீவி மந்திரத்தை யாரால் மக்களுக்கு நன்மை கிடைக்குமோ அவர்களுக்கு மட்டுமே உபதேசம் செய் என்று கூறி மீண்டும் சமாதியில் ஐயக்கிமாகிவிட்டார்கள். பின் போகர் அங்கிருந்து கிளம்பி சிவலிங்கம் உள்ள தலங்களை தரிசித்து வந்துகொண்டிருந்தார். அடர்ந்த காட்டை கடந்து வரும்போது ஒரு புற்று கண்ணில் பட்டது புற்றின் அருகே சென்றபோது மூச்சுக் காற்று வருவதை உணர்ந்தார். புற்றின் முன்னே ஏன், எதற்கு என்று அறியாமலேயே மனத்தின் கட்டளைப்படி தியானத்தில் அமர்ந்தார். பல நாட்கள் தியான நிலையிலேயே அமர்ந்து இருந்தார். ஒருநாள் காலை பொழுதில் புற்றை உடைத்துக் கொண்டு ஒரு முனிவர் வந்து போகரின் தியானத்தை கலைத்தார். கண்களை கூசச் செய்யும் பிரகாசமான முகத்தையுடைய அந்த முனிவரைப் பார்த்ததும் போகர் வணங்கினார். அந்த முனிவர் ” போகரே உன்னால் மக்களுக்கு நன்மை உண்டாகட்டும்” என்று கூறி அருகே இருந்த மரத்தை காட்டி மரத்திலுள்ள பழங்கள் பழுத்து குலுங்கி இருந்த நிலையைக் காட்டி அந்த பழத்தை சாப்பிட்டால் பசி என்பதே அணுகாது. நீ செய்யும் தவத்திற்கு பெரும் துணையாக இருக்கும் என்று கூறி பேசும் சிலை ஒன்றையும் கொடுத்து விட்டு மீண்டும் புற்றில் அமர்ந்து தியானத்தில் அமர்ந்தார்.
சிலையை கையில் வாங்கிக் கொண்ட போகர் அருகிலுள்ள முனிவர் காட்டிய மரத்தின் பழங்களை எடுத்து சாப்பிட்டார். மனம் மட்டுமல்ல, உடலும் இளமையாக மாறியது. கையில் இருந்த சிலை, இளமையான மாற்ற வைத்த பழத்தின் ரகசியத்தையும், மற்றும பல மூலிகைகளின் ரகசியத்தையும் கூறியது,ஆச்சிரயத்தில் ஆழ்ந்த போகர், சிலையை தரையில் வைத்து விடடு அருகே அமர்ந்தார், அந்த இடத்தில் பள்ளம் ஏற்பட்டு பள்ளத்தில் அந்த சிலை மறைந்தது.
சிவன் சித்தத்தை தெளியவைத்தார், எனறு நினைத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தார். அவர் பெரிய சித்தர் என்பதை அறியாமல் எதிரில் வந்த அந்தனர்கள் சிலர் போகரின் கோலத்தைக் கண்டு ஏளனம் செய்தனர், போகரோ அவர்களின் ஏழ்மையை போக்க எண்ணினார், ஞானத்தை உபதேசிக்க வேண்டும்என்று நினைத்தார், உடனே சற்று தூரத்தில் ஒரு பூனை ஒன்று கண்ணில் பட்டது, பூனை அருகே அமர்ந்து வேதத்தை அதன் காதில் ஓதி, பேசும் திறனை கொடுத்தார்.
பூனை வேத மந்திரங்களை வீதியில் அமர்ந்து கூறத் தொடங்கியது. இதைப் பார்த்த அந்தணர்கள் போகர் பித்தனல்ல. சித்தர் என்பதை புரிந்து கொண்டு எங்களை மன்னிக்க வேண்டும் என்று கூறி அவர்கள் போகரை தங்கள் இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர், அவருக்கு அன்னமிட்டு மகிழ்வித்தனர். மனதில் சந்தோசத்துடன் அவர்கள் வீடுகளில் இருந்த உலோக பொருட்களை ரசவாதத்தினால் தங்கமாக மாற்றினார், அந்தணர்கள் சித்தரின் திறன் கண்டு அதிசயத்தினர். வேதங்களை உபதேசித்து எல்லோரையும் மேன்மையுறச் செய்தார். பழனிமலையில் தவம் செய்யும் போது முருகப் பெருமான் அவருக்கு காட்சி கொடுத்து என்னை விக்ரமாக செய்து இந்த இடத்தில் பிரதிஸ்டை செய் என்று கூறி மறைந்தார். அதன் படி நவபாசானம் என்ற ஒன்பது வித மூலிகை கலவையால் முருகனின் மூல விக்ரகத்தை பிரதிஷ்டை செய்தார். அதன் பின் பழனி மலையிலேயே வாழ்ந்த சித்தர் அங்கேயே ஜீவ சமாதி ஆனார். இன்றும பழனி மலையில் உள்ள கோவிலின் உட்பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் சித்தர் போகரின் ஜீவசமாதி உள்ளது. நவக்கிரகங்களில் செவ்வாய் பகவானின் ஆதிக்கம் நிரம்ப பெற்றவர் சித்தர் போகர், செவ்வாய் தோசம் உள்ளவர்கள் செவ்வாய் கிழமைகளில் இவரை வழிபட்டால் செவ்வாய் தோசம் நீங்கி நல்அருள் பெறுவர்.
திருசிற்றம்பலம்

Leave a Reply